உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு
சுதந்திர தின விழாவை சீர்குலைக்க முயற்சி நடப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால் டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
By : Karthiga
டெல்லி சுதந்திர தின விழாவை சிறப்பிக்க வழக்கம் போல மலர் அலங்காரம், பிரதமருக்கு வரவேற்பு, அணிவகுப்பு மரியாதை, பின்னர் தேசியக்கொடி ஏற்றுதல் போன்ற நிகழ்வுகள் நடைபெறுகிறது. இதற்கிடையே சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்கு மேலாக கலவரத்தை சந்தித்து வரும் மணிப்பூரை சேர்ந்த குகி மொய்தி பழங்குடியின போராட்டக் குழுக்கள் சுதந்திர தின கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் வகையில் டெல்லியில் போராட்டம் நடத்த வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே முன்னெச்சரிக்கையாக பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதிக டெல்லி செங்கோட்டை, ராஜ்காட் ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. செங்கோட்டையை சுற்றிலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. பலத்த சோதனைக்கு பிறகு விருந்தினர்கள் விழா நடக்கும் பகுதிக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
என்னென்ன பொருட்களை கொண்டு வரலாம் என்பது தொடர்பாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சுதந்திர தின விழாவில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அடுத்த மாதம் டெல்லியில் நடக்கும் ஜி-20 மாநாட்டுக்கும் பாதிப்பு ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது. ஜி- 20 மாநாட்டில் உலக நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள். எனவே எந்த அசம்பாவிதமும் இன்றி சுதந்திர தின விழாவை நடத்தி முடிக்க பாதுகாப்பு படைகள் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றன.
SOURCE :DAILY THANTHI