பொது சிவில் சட்டம் குறித்து இத்தனை லட்சம் பேர் கருத்துக்கணிப்பா? இந்திய சட்ட ஆணையம் தகவல்
பொது சிவில் சட்டம் குறித்து கருத்து தெரிவிக்க நாளை கடைசி நாள் என்ற நிலையில் இதுவரை 46 லட்சம் கருத்துக்கள் தரப்பட்டு இருப்பதாக சட்ட ஆணையம் கூறியுள்ளது.
By : Karthiga
திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை, தத்தெடுத்தல் உள்ளிட்ட சிவில் விவகாரங்களில் அனைத்து மதத்தினருக்கும் ஒரே மாதிரியான சட்டத்துக்கு பொது சிவில் சட்டம் வகை செய்கிறது. இச்சட்டத்தை கொண்டு வருவதாக பா.ஜனதா தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளது. பொது சிவில் சட்டம் கொண்டு வருவது அவசியம் என்று கடந்தமாதம் பா.ஜனதா தொண்டர்கள் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி கூறினார்.
மேலும் பொது சிவில் சட்டம் தொடர்பாக பொதுமக்களிடம் இந்திய சட்ட ஆணையம் கருத்து கேட்க தொடங்கியது. கடந்த மாதம் 14- ஆம் தேதி இது தொடர்பான பொது நோட்டீசை வெளியிட்டது. பொதுமக்கள் பல்வேறு மத அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கருத்துக்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டது. இப்படி கருத்து தெரிவிப்பதற்கான கால அவகாசம் நாளை முடிவடைகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வரை சுமார் 46 லட்சம் கருத்துகளும் யோசனைகளும் பெறப்பட்டிருப்பதாக இந்திய சட்ட ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் வரும் நாட்களில் சில அமைப்புகளையும் பொதுமக்களையும் நேரடி கருத்துக்கருப்புக்கு அழைக்க சட்ட ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதற்கான அழைப்பிதழ்கள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கு முன்பு இருந்த 21வது இந்திய சட்ட ஆணையம் பொது சிவில் சட்டம் குறித்து இதேபோல் கருத்து கேட்டது. இறுதியாக கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதி ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் இந்த நேரத்தில் பொது சிவில் சட்டம் தேவையும் அல்ல விரும்பத்தக்கதும் அல்ல என்று கூறியிருந்தது. இருப்பினும் 21-வது சட்ட ஆணையத்தின் பதவி காலம் முடிவடைந்து விட்டதால் தாங்கள் புதிதாக கருத்து கேட்டு வருவதாக தற்போதைய சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது. ஆட்சி நடக்கும் உத்தரகாண்ட் மாநிலம் தங்கள் மாநிலத்திற்கான பொது சிவில் சட்டத்தை வெளியிட தயாராகி வருகிறது.
SOURCE :DAILY THANTHI