இந்திய அரசியலிலே மிகப்பெரிய ஊழல் குடும்பம் சோனியா காந்தி குடும்பம் தான் - பா.ஜக
இந்திய அரசியலிலேயே மிகப்பெரிய ஊழல் குடும்பம் சோனியா காந்தி குடும்பம் தான் என்று பா.ஜனதா குற்றம் சாட்டி உள்ளது.
By : Karthiga
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்காவின் கணவரும் ஆன ராபர்ட் வதேரா மீது அமலாக்கத்துறை சட்டவிரோத பண பரிமாற்ற விசாரணை நடத்தி வருகிறது. காங்கிரஸ் ஆட்சி நடந்த போது ராஜஸ்தான் மாநிலம் பிகனேரில் வதேராவுடன் தொடர்புடைய நிறுவனம் நிலம் வாங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக இந்த விசாரணை நடக்கிறது. இந்த விசாரணையை ரத்து செய்யக்கோரி ராபர்ட் வதேரா தாக்கல் செய்த மனுவை ராஜஸ்தான் ஐகோர்ட் கடந்த வாரம் தள்ளுபடி செய்தது.இந்த நிலையில் இது குறித்து பா.ஜனதா செய்தி தொடர்பாளர் கௌரவம் பாட்டியா அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மத்தியிலும் அரியானா ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ராபர்ட் வதேரா சட்டவிரோத பண பரிமாற்ற மோசடியில் சிக்கி உள்ளார்.இப்பிரச்சனையில் சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் மௌனத்தை கலைக்க வேண்டும். இதை பழிவாங்கும் நடவடிக்கை என்று சொல்வது தவறு. ராபர்ட் வதேரா மீதான விசாரணையை ரத்து செய்ய ஐகோர்ட் மறுத்திருப்பதால் நீதித்துறை மீது அவதூறு கூறுவது போன்றது. இந்திய அரசியலிலேயே மிகப்பெரிய ஊழல் குடும்பம் சோனியா காந்தி குடும்பம். ஊழல் செய்வதும் நிலத்தை பறித்து ராபர்ட் வதேராவிடம் ஒப்படைப்பதும் தான் அந்த குடும்பத்தின் வேலை. அந்த குடும்பத்தில் மூன்று பேர் ஊழல் வழக்குகளில் ஜாமினில் உள்ளனர். ஊழலை சிறிதும் சகித்துக் கொள்ளாத மத்திய அரசுக்கு இது கவலைக்குரிய விஷயம். இவ்வாறு அவர் கூறினார்.