தமிழா? சமஸ்கிருதமா? பழமையான மொழி எது?- தமிழக கவர்னருக்கே இப்படி ஒரு குழப்பமா?
தமிழ் சமஸ்கிருதத்தில் பழமையான மொழி எது என்பதில் தீர்வு எட்டப்படவில்லை என்று கவர்னர் யார் ஆர்.என்.ரவி பேசினார்.
By : Karthiga
சென்னை கிண்டி ராஜ்பவனில் நேற்று யுவ சங்கம் என்ற தலைப்பில் பீகார் மாநில மாணவர்களுடன் கவர்னர் ஆர்.என் ரவி கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:-
நான் பிறந்த வளர்ந்த மாநிலம் பீகார். தமிழகத்திற்கு வந்து ஒன்றரை ஆண்டுகளில் நான் தினம் ஒன்றை கற்றுக் கொண்டிருக்கிறேன். தமிழகம் சிறந்த மாநிலம் . தமிழ் உலகில் சிறந்த மொழி. உலகின் பழமையான மொழிகள் சமஸ்கிருதம் மற்றும் தமிழாகும். இவற்றில் எது பழமையான மொழி என்பதற்கான தீர்வு இதுவரை எட்டப்படவில்லை.
சமஸ்கிருதத்தில் இருந்து பல வார்த்தைகள் தமிழ் மொழிக்கும் தமிழில் இருந்து பல வார்த்தைகள் சமஸ்கிருதத்திற்கும் சென்றுள்ளன. இரண்டு மொழிகளும் சமமாக உள்ளன. மாணவர்கள் 2000 ஆண்டுகள் பழமையான திருக்குறளை கற்க வேண்டும். இதிலிருந்து தமிழ் மொழி எவ்வளவு சிறந்தது என்பதை அறியலாம்.
பாரதம் 1947 - ஆம் ஆண்டில் உருவாக்கப்படவில்லை . பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது, பாரதம். இந்த நாட்டை ராஜாக்களும் ஆட்சியாளர்களும் எந்த பாகுபலியும் உருவாக்கவில்லை .பாரதம் ரிஷிகளால் உருவாக்கப்பட்டது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு கல்விக்காகவும் குடியேறவும் பயணிக்க தொடங்கினர் .இதில் எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை.
100 ஆண்டுகளுக்கு முன்பு 40,000 தமிழர்கள் காசிக்குச் சென்றனர். சௌராஷ்ட்ராவை சேர்ந்தவர்கள் தமிழகத்திற்கு வருகை தந்தனர். தமிழ்நாட்டில் பல ராஜாக்கள் இருக்கலாம் . ஆனால் மக்கள் ஒன்றுதான். அந்த காலகட்டத்தில் மொழிகள் யாருக்கும் தடையாக இருந்ததில்லை .என் தாயும் பாட்டியும் கூட பாட்னாவில் இருந்து ராமேஸ்வரத்திற்கு பயணம் மேற்கொண்டனர் . வாழ்வில் ஒருமுறையாவது காசிக்கும் ராமேஸ்வரத்திற்கும் செல்ல வேண்டும் என்று நினைத்து பயணித்தனர் இவ்வாறு அவர் பேசினார்.