அரசு நிர்ணயித்த விலையை விட டாஸ்மாக் கடையில் ரூ.10 கூடுதலாக வசூல்: பேனர்களால் பரபரப்பு
டாஸ்மாக் கடையில் அரசு நிர்ணயத்த விலையை விட கூடுதலாக ரூபாய் 10 வசூலிக்கப்படுவதாக வைக்கப்பட்ட பேனர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
By : Karthiga
தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான கடைகள் தமிழக அரசால் நடத்தப்பட்டு வருகிறது. டாஸ்மாக் மது பாட்டில்களில் அதிகபட்ச விலை மற்றும் வரிகள் உட்பட எத்தனை ரூபாய் என்று மது பாட்டிலில் அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு மது பாட்டில்களில் அச்சிடப்பட்ட விலையை விட கூடுதலாக ரூபாய் 10 சேர்த்து டாஸ்மாக் கடைகளில் வசூலிக்கப்படுவதாக மது பிரியர்கள் தெரிவிக்கின்றனர் .
இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடை மது பாட்டில்களுக்கு கூடுதலாக ரூபாய் 10 பெறுவதை சுட்டிக்காட்டும் விதமாக மூன்று இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த பேனர்களில் தமிழ்நாட்டில் உள்ள தமிழக அரசால் நடத்தப்படும் டாஸ்மாக் கடைகளில் அதிகபட்ச விலை மற்றும் வரிகள் உட்பட என விலையச்சிட்டு விற்பனை செய்யப்படுகிறது .
ஆனால் அனைத்து டாஸ்மாக் களிலும் அரசு நிர்ணயத்தை விலையை விட கூடுதலாக ரூபாய் 10 சேர்த்து விற்பனை செய்யப்படுகிறது. அந்த ரூபாய் 10 யாருக்கு செல்கிறது என்று தெரியும் வரை கூடுதல் விலைக்கு விற்க கூடாது. அப்படி மீறி விற்பனை செய்தால் டாஸ்மாக் இழுத்து மூடப்படும். அந்த கூடுதல் ரூபாய் 10 பெரும் பிச்சைக்காரன் யார் என்று எங்களுக்கு தெரிய வேண்டும். அதுவரை கடையை மூடுமாறு டாஸ்மாக் நிறுவனத்துடன் கேட்டுக்கொள்கிறோம் என்று அந்த பேனரில் உள்ளது இந்த பேனர் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஆனால் நேற்று முன் தினம் இரவு வைக்கப்பட்ட இந்த பேனர்கள் நேற்று மதியம் அகற்றப்பட்டது. பேனர்களை வைத்தவர்களே அவற்றைக் கழட்டி எடுத்து சென்று விட்டதாக டாஸ்மா கடை மேலாளர் தெரிவித்தார் .ஆனாலும் அங்கு மதுபானம் வாங்கி வந்தவர்களிடம் கேட்டபோது ரூபாய் 130 குவாட்டர் மது பாட்டிலுக்கு ரூபாய் 140 கொடுத்து டாஸ்மாக் கடையில் வாங்கியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.