நாடாளுமன்ற அத்துமீறல் நடந்ததற்கு முன் தினமே பாதுகாப்பை அதிகரிக்க டெண்டர் வெளியிட்டிருந்த மத்திய அரசு - ரூ.35 கோடி தளவாடங்களுக்கு விண்ணப்பம்!
நாடாளுமன்றத்தில் அத்துமீறல் நடந்ததற்கு முன் தினம் அங்கு பாதுகாப்பு வலுப்படுத்துவதற்கான தளவாடங்கள் வாங்குவதற்கு மத்திய அரசு டெண்டர் வெளியிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
By : Karthiga
நாடாளுமன்ற மக்களவையில் நேற்று முன்தினம் பார்வையாளர் மாடத்தில் இருந்து குதித்த இரண்டு வாலிபர்கள் அவைக்குள் வண்ணப் புகை குண்டுகளை வீசி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினர். அதே நேரத்தில் நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் ஒரு பெண் உட்பட இரண்டு பேர் வண்ண புகை குண்டுகளை வீசி கூடுதல் பதட்டத்தை உருவாக்கினர். அவர்கள் நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்கள் மீது உபா சட்டத்திற்கு வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில் சம்பவம் நடப்பதற்கு முந்தைய நாளில் நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான தளவாடங்கள் வாங்குவதற்கு மத்திய அரசு டெண்டர் வெளியிட்டிருந்தது தற்போது தெரியவந்துள்ளது. அதாவது பாதுகாப்பு கருவிகள், பாதுகாப்பு படையினருக்கு குண்டு துளைக்காத உடைகள் உட்பட ரூபாய் 35 கோடி மதிப்பில் கூடுதல் பாதுகாப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்காக இந்த டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் வரவேற்பு அறை மற்றும் பிற பாதுகாப்பு உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக மதிய பொதுப்பணித்துறை சார்பில் இந்த டெண்டர் வெளியிடப்பட்டிருந்தது. இதற்கான கடைசி நாளாக வருகிற 22ஆம் தேதி அறிவிக்கப்பட்டு இருந்தது. இவ்வாறு நாடாளுமன்ற பாதுகாப்பை மேம்படுத்தும் பணிக்கான டெண்டர் வெளியிடப்பட்ட மறுநாளே மக்களவையில் அத்துமீறல் சம்பவம் நடந்திருப்பது டெல்லி வட்டாரங்களை அதிர்ச்சியில் ஆழ்த்திருக்கிறது .
இதைத் தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி போக்குவரத்து பவன், கிரிஷி பவன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு படையினர் நேற்று நிறுத்தப்பட்டு இருந்தனர். மேலும் நாடாளுமன்றத்துக்கு வரும் பார்வையாளர்கள் அனைவரும் முழுமையான பரிசோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். மேலும் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு பின்னரே செல்ல அனுமதிக்கப்பட்டன.
SOURCE :DAILY THANTHI