வலுவான பொருளாதார நடவடிக்கையால் வரி வசூலில் இலக்கை எட்டிய மத்திய அரசு!
மத்திய அரசு எடுத்த வலுவான பொருளாதார நடவடிக்கையால் கடந்த நிதியாண்டுக்கான வரி வசூலில் இலக்கை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
![வலுவான பொருளாதார நடவடிக்கையால் வரி வசூலில் இலக்கை எட்டிய மத்திய அரசு! வலுவான பொருளாதார நடவடிக்கையால் வரி வசூலில் இலக்கை எட்டிய மத்திய அரசு!](https://kathir.news/h-upload/2024/04/04/1605748-adobeexpress2024040414195401.webp)
கடந்த நிதியாண்டுக்கான பட்ஜெட் மறுமதிப்பீட்டில் நிர்ணயிக்கப்பட்ட வரி வருவாய் இலக்கை மத்திய அரசு எட்டியுள்ளதாக மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவான செய்திகளை பற்றி காண்போம் .
சமீபத்திய பட்ஜெட் தாக்கலின் போது மத்திய அரசு கடந்த நிதி ஆண்டுக்கான மொத்த வரி வருவாய் 34.37 லட்சம் கோடியாக இருக்கும் என்று இலக்கு நிர்ணயித்திருந்தது. மேலும் நேரடி வரிவருவாய் 19.45 லட்சம் கோடியாகவும் மறைமுக வரி வருவாய் 14.84 லட்சம் கோடியாகவும் இருக்கும் என்றும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வலுவான பொருளாதாரம் நடவடிக்கைகள் காரணமாக கடந்த நிதியாண்டுக்கான அரசின் வரி வருவாய் இலக்கு எட்டப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 17-ஆம் தேதி நிலவரப்படி கார்ப்பரேட் மற்றும் தனிநபர் வரி வருவாயை உள்ளடக்கிய நிகர நேரடி வரிவருவாய் ரூபாய் 18.90 லட்சம் கோடியை தாண்டி உள்ளது. கடந்த நிதி ஆண்டில் ஜிஎஸ்டி வருவாய் வலுவாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக கடந்த ஆண்டு ஏப்ரலில் ரூபாய் 1.87 லட்சம் கோடியும் இதற்கு அடுத்தபடியாக நடப்பு மார்ச்சில் ருபாய் 1.78 லட்சம் கோடியும் ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்டுள்ளது.
SOURCE :Kaalaimani.com