108 அடி நீள ஊதுபத்தியை உருவாக்கி ராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு பரிசளித்த பக்தர் - பொதுமக்கள் உற்சாக வரவேற்பு!
ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பல்வேறு பொருட்கள் பக்தர்களால் பரிசளிக்கப்பட்டு வரும் நிலையில் 108 அடி நீளம் ஊதுபத்திய உருவாக்கி ஒருவர் கொடுத்துள்ளார்.
By : Karthiga
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் ஜனவரி 22-ஆம் தேதி திறக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படவுள்ளது. அன்றைய தினமே ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகள் ஜனவரி 15 ஆம் தேதிக்குள் நிறைவடையும் எனவும்,ராமர் பிரதிஷ்டைக்கான பூஜை ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 22 ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கும்பாபிஷேகத்திற்குப் பிறகு ஜனவரி 24 முதல் 48 நாட்களுக்கு மண்டல பூஜை சடங்குகள் மரபுகளின்படி நடைபெறவுள்ளது. இதையடுத்து, ஜனவரி 23ஆம் தேதி முதல் அயோத்தி ராமர் கோயில் பக்தர்களின் தரிசனத்துக்காக திறக்கப்படவுள்ளது. அதேசமயம், கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ராமர் கோயில் திறக்கப்படுவதையொட்டி அயோத்தியில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யபட்டு வருகின்றன. அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டு ராமர் கோவிலின் கும்பாபிஷேக திருவிழாவை பார்த்து ரசிக்க காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அதே போல குஜராத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் 108 அடி நீளம் கொண்ட பெரிய ஊதுபத்தியை தயார் செய்து ராமர் கோவிலுக்கு பரிசாக வழங்கியுள்ளார். இதனை பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து பாராட்டியுள்ளனர். குஜராத் மாநிலம் வதோதராவில் வசிக்கும் பிஹாபாய் பர்வாத் எனும் ராம பக்தர் ராமர் கோவில் திறப்பு விழாவை கொண்டாடுவதற்காக 108 அடி நீளமும் கொண்ட ஒரு பெரிய ஊதுபத்தியை உருவாக்கியுள்ளார். இந்த ஊதுபத்தி ஒரு மாதம் முதல் ஒன்றரை மாதங்கள் வரை எரியும் என அவர் கூறுகிறார். பக்தி மணம் கமழும் ராமர் கோவிலில் மணம் பரப்புவதற்காக யாகத்தில் பயன்படுத்தப்படும் பல்வேறு பொருட்கள் அதன் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
376 கிலோ குக்குல் என்ற பிசின், 376 கிலோ தேங்காய் மட்டைகள், 190 கிலோ நெய், 1470 கிலோ பசுஞ்சாணம் ,420 கிலோ மூலிகைகள் ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த ஊதுபத்தி 3.5 அடி சுற்றளவு 108 அடி நீளமும் கொண்டது. அதன் எடை 3 ஆயிரத்து 610 கிலோ ஆகும் .இது பற்றி அதனை தயாரித்த வினா பருவத் கூறுகையில் இந்த ஊதுபத்தி சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்தது. சுமார் ஒன்றரை மாதம் நறுமணத்தை பரப்பும் என்றார்.
SOURCE :NEWS