திருப்பதி உண்டியலில் பக்தர்கள் பணம் கொட்டுவதன் காரணம்
திருப்பதி உண்டியலில் பக்தர்கள் தங்கள் காணிக்கையை மிகுதியாக அளவு கடந்த பக்தியோடு வந்து கொட்டி விட்டு செல்கின்றனர்.அதற்கான சுவாரஸ்ய தகவல்.
By : Karthiga
உலகம் முழுவதும் உள்ள ஆலயங்களில் வழிபடும் பக்தர்கள் அனைவரும் தங்களால் முடிந்த காணிக்கைகளை உண்டியலில் செலுத்துவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். ஆனால் திருப்பதியில் மட்டும் எந்த ஆலயத்திலும் இல்லாத அளவுக்கு பணம் கொட்டுவதற்கு என்ன காரணம் என்றால் அதற்குப் புராணத்திலிருந்து ஒரு நிகழ்வை மேற்கோள் காட்டுகிறார்கள். மன்னன் ஆகாசராஜனின் மகள் பத்மாவதியை விரும்பிய ஸ்ரீனிவாசன் அந்த தேவியை மணம் முடிப்பதற்காக திருமண ஏற்பாடுகளை கவனித்தார். அந்த நேரத்தில் லட்சுமிதேவி ஸ்ரீனிவாச பெருமாளை விட்டு விலகி இருந்தார். எப்போதும் இறைவனின் நெஞ்சில் வசிக்கும் லட்சுமிதேவி இல்லாத காரணத்தால் திருமண செலவுக்கான பணத்திற்கு பெருமாள் மிகவும் கஷ்டப்பட்டார். பணமில்லாமல் எப்படி திருமணத்தை விமரிசையாக நடத்துவது என்று அவர் தவித்தார்.
தன் திருமணத்திற்கான பணம் முழுவதையும் தர வேண்டும் என்றால் உலகின் அனைத்து வளங்களையும் பெற்ற பெரிய செல்வந்தனால் தான் முடியும் அது குபேரன் தான் என்று ஸ்ரீனிவாச பெருமாள் முடிவு செய்தார். பின்னர் குபேரனை அழைத்து வைகாசி மாதம் வளர்பிறை தசமியுடன் கூடிய வெள்ளிக்கிழமை அன்று பத்மாவதி நான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன். லட்சுமி இப்போது என்னுடன் இல்லாத காரணத்தால் என்னிடம் செல்வம் இல்லை. எனவே திருமணத்திற்கு தேவையான பணத்தை நீதான் எனக்கு கொடுத்து உதவ வேண்டும் என்றார். ஸ்ரீனிவாச பெருமாளின் வேண்டுகோளுக்கு குபேரன் மகிழ்ச்சியுடன் சம்மதித்தார்.
எவ்வளவு தேவையோ அவ்வளவு பணத்தை கொடுப்பதாக ஒப்புக்கொண்டார் . அதன்படி ஸ்ரீனிவாச பெருமாளுக்கு குபேரன் கொடுத்த தொகை ஒரு கோடியே 14 லட்சம் பொன். இந்த தொகை பல்வேறு விதமாகவும் நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது என்று சொல்லப்படுகிறது. குபேரனிடம் கடன் வாங்கியதற்காக ஸ்ரீநிவாச பெருமாள் கடன் பத்திரம் எழுதிக் கொடுத்தார். பின்னர் குபேரனிடம் "நீ கொடுத்த பணத்துக்கு கலியுகத்தில் வட்டி செலுத்திக்கொண்டு, கலியுகத்தின் முடிவில் அசல் - வட்டி எல்லாம் சேர்த்து கொடுத்து விடுகிறேன்" என்றாராம். ஸ்ரீநிவாச பெருமாள் அதற்காகத்தான் தன்னை தேடி வரும் பக்தர்களிடம் அவர்களின் பாவ கணக்கிற்கு ஏற்ப பணத்தை வசூல் செய்து பக்தர்களின் பாவங்களை போக்குவதோடு குபேரனின் கடனையும் அடைத்துக் கொண்டிருக்கிறார்.