உலக மக்கள் தொகை 800 கோடி ஆகிறது
நாம் வசிக்கும் இந்த மாபெரும் பூமியின் மக்கள் தொகை எகிறிக் கொண்டே செல்கிறது. நாளை மறுநாள் உலக மக்கள் தொகை 800 கோடி ஆகப்போகிறது. ஐ.நாவின் புதிய மக்கள் தொகை மதிப்பீட்டில் இந்த தகவல் தெரிவிக்கபட்டுள்ளது.
By : Karthiga
பூமியில் மனிதர்களின் எண்ணிக்கை 800 கோடி ஆகப்போகும் தகவல் கடந்த ஜூலை 11ஆம் தேதி ஐ.நா.வால் வெளியிடப்பட்டது. உலக மக்கள் தொகை தினமான அன்றைய நாளில் வெளியான ஐ.நா உலக மக்கள் தொகை வாய்ப்பு 2022 அறிக்கையில் அந்த தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அந்த இலக்கை இன்னும் இரண்டு நாட்களில் எட்டப்போகிறோம் மக்கள் தொகையால் பிதுங்கி வழிவது கொஞ்சம் பீதி ஏற்படுத்தினாலும் ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியா குட்டரெஸ் நம்பிக்கையோடு பேசுகிறார். நமது பன்முக தன்மையை கொண்டாடுவதற்கான பொது மனிதநேயத்தை அங்கீகரிப்பதற்கான,வாழ்நாளை நீட்டித்து மகப்பேறு காலம் மற்றும் குழந்தை இறப்பு விகிதத்தை வெகுவாக குறைத்துள்ள மருத்துவ துறையின் மகத்துவத்தை போற்றுவதற்கான நேரம் இது என்கிறார்.அதே நேரம் ஐ.நா பொதுச் செயலாளர் கூறும் ஒரு முக்கியமான எச்சரிக்கை :-
உலக மக்கள் தொகை800 கோடியை எட்டுவது நமது பூமியை காக்கும் நம்முடைய கூட்டு பொறுப்பை நினைவூட்டும் விஷயமாகும். நமது பொறுப்புகளில் எங்கே பின்தங்கி இருக்கிறோம் என்று சிந்திப்பதற்கான நேரமும் இது என்கிறார். 2050ஆம் ஆண்டளவில் உலக மக்கள் தொகையில் பாதிக்கு மேல் இந்தியா, பாகிஸ்தான், காங்கோ, எகிப்து, எத்தியோப்பியா நைஜீரியா, பிலிப்பைன்ஸ், தான்சானியா ஆகிய 8 நாடுகளிலேயே அடங்கி இருக்கும் என்று ஐ.நா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக மக்கள் தொகை 700 கோடியில் இருந்து 800 கோடி ஆவதற்கு 12 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இதிலிருந்து 900 கோடி தொடுவதற்கு 15 ஆண்டுகள் ஆகும். ஆக 2037 இல் தான் அந்த 'மைல்கல்லை' எட்டுவோம். ஒட்டுமொத்த உலக மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைந்து வருவதை இது காட்டுகிறது என்கிறார்கள் நிபுணர்கள்.