திருவாரூர் தியாகராஜர் கோவில் கோபுரங்களில் செடிகள் முளைத்து சிதையும் சிற்பங்கள்- நடவடிக்கை எடுக்க பக்தர்கள் வலியுறுத்தல்!
உலகப் பிரசித்தி பெற்ற திருவாரூர் கோவில் கோபுரங்களில் செடிகள் முளைத்து அழகான கலைநயத்துடன் கூடிய சிற்பங்கள் சிதைவுற்று வருகின்றன.
By : Karthiga
தமிழகத்தில் தோன்றிய சைவத் திருக்கோவில்களில் வரலாறு கணக்கிட முடியாத மிகவும் பழமை வாய்ந்தது திருவாரூர் தியாகராஜர் கோயிலாகும். சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் சர்வதேச பரிகார தலமாகவும் விளங்குகிறது .அப்பர், சுந்தரர் திருஞானசம்பந்தர் , மாணிக்கவாசகர் ஆகிய நால்வரால் பாடல் பெற்ற தலமாகும். ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்கிற பெருமைமிக்கது இந்த கோவிலின் தேர்.
இந்த சிறப்புமிக்க கோவிலில் கடந்து 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எட்டாம் தேதி அன்று ரூபாய் 3 கோடியே 18 லட்சம் அரசு நிதி ஒதுக்கீடு செய்தும் உபயதாரர்கள் பங்களிப்புடனும் குடமுழுக்கு நடந்தது. இந்த சிறப்புமிக்க கோவிலில் நான்கு திசைகளிலும் உள்ள பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள கோபுரங்களில் கலைநயத்துடன் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது.
இந்த சிறப்பு மிக்க ராஜகோபுரம் ,தெற்கு கோபுரம், மேற்கு கோபுரம் ஆகிய கோபுரங்களில் தற்போது போதிய பராமரிப்பு இன்றி செடிகள் முளைத்து சிறு மரங்களாக வளர்ந்து கொண்டே செல்கிறது. செழிப்பாக வளரும் இந்த மரங்களால் கோபுரங்களில் இடம்பெற்றுள்ள கலைநயம் மிக்க சிற்பங்கள் சுதையால் செய்யப்பட்ட சிற்பங்கள் சிதையும் அபாயம் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த செடிகள் சிறு மரங்களை அகற்ற கோவில் நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது வேதனைக்குரியது.
எனவே பிரசித்தி பெற்ற தியாகராஜர் கோவிலின் ராஜகோபுரம், தெற்கு உள்ளிட்ட கோபுரங்களில் கட்டுமானங்கள் சிதைவு ஏற்படுவதையும் கலைநயமிக்க சிற்பங்கள் சிதைவடைவதையும் தடுத்து செடிகள் , சிறு மரங்களை உடனடியாக அகற்றி கோபுரங்களை பாதுகாத்திட கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
SOURCE :DAILY THANTHI