ஒரே நாளில் இரண்டு குழந்தைகள் உயிர் இழப்பு: குழந்தைகளின் உடலை மாற்றி கொடுத்த ஆஸ்பத்திரி ஊழியர்களின் அலட்சியம்
ஒரே நாளில் உயிரிழந்த இரண்டு குழந்தைகளின் உடலை மாற்றிக் கொடுத்த ஆஸ்பத்திரி ஊழியர்கள். மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்.
By : Karthiga
மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு நேற்று முன் தினம் ஒரே நாளில் இரண்டு பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. குழந்தைகளுக்கு அசுத்தமான பால் கொடுக்கப்பட்டதால் இறந்ததாக குழந்தைகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டினர். ஆனால் ஆஸ்பத்திரி நிர்வாகம் அதை திட்டவட்டமாக மறுத்தது.
இதனிடையே இறந்த இரண்டு குழந்தைகளின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்கும் போது ஆண் குழந்தையின் பெற்றோரிடம் பெண் குழந்தையின் உடலையும், பெண் குழந்தையின் பெற்றோரிடம் ஆண் குழந்தையின் உடலையும் ஆஸ்பத்திரி ஊழியர்கள் மாற்றி கொடுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த இரண்டு குழந்தைகளின் பெற்றோரும் அவர்களின் உறவினர்களும் ஆஸ்பத்திரி ஊழியர்களிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதை அடுத்து ஆஸ்பத்திரி அதிகாரிகள் அவர்களை சமாதானம் செய்து அந்தந்த பெற்றோரிடம் அவர்களது குழந்தையை சரியாக ஒப்படைத்தனர் . இதனிடையே இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து ஒரு நர்ஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மூன்று டாக்டர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
SOURCE :DAILY THANTHI