திருவாரூர் தெப்பத்திருவிழாவில் பலியான இரு உயிர்கள், சரிந்து விழுந்த தூண் - ஏதேனும் அபசகுனமா?
திருவாரூர் தியாகராஜர் கோவில் தெப்பத் திருவிழாவில் இரு உயிர்கள் பலியாகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
By : Mohan Raj
திருவாரூர் தியாகராஜர் கோவில் தெப்பத் திருவிழாவில் இரு உயிர்கள் பலியாகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகப் புகழ் பெற்ற சிவஸ்தலமான திருவாரூரில் சமீபத்தில்தான் தேர் திருவிழா முடிந்தது இதனை முன்னிட்டு தற்போது திருவிழா நடந்து வருகிறது. இந்த நிலையில் திருவாரூர் தியாகராஜர் தெப்ப திருவிழாவின் போது கமலாலயக் குளத்தில் இரு உயிர்கள் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வருடா வருடம் நடைபெறும் தேர்த் திருவிழாவிற்கு அடுத்தபடியாக கமலாலயக் குளத்தில் திருவாரூர் தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த வழக்கத்தின்படி மே 20-ஆம் தேதி வெள்ளிக்கிழமை துவங்கி ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்களுக்கு தெப்பத் திருவிழாவும் மிகவும் விமர்சையாக நடைபெற்ற நிலையில் நேற்று மாலை குளத்தில் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.
மூன்றாம் நாளான நேற்று ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து இங்கு பலூன் விற்க வந்த வியாபாரியின் மகள் முஸ்கான் என்ற சிறுமி கமலாலய குளத்தில் இறங்கி குளித்து விட்டு கரையேறிய போது தவறி விழுந்து இறந்துள்ளார். தீயணைப்பு வீரர்கள் 50க்கும் மேற்பட்ட தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு சிறுமியின் சடலத்தை மீட்டுள்ளனர்.
மேலும் ஒரு சம்பவமாக திருவாரூர் மாவட்டம் புலிவலம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் வெங்கடேசன் கமலாலயக் குளத்தில் நீச்சல் அடித்துக் கொண்டு நடுவான் குளத்திற்குச் செல்ல முயன்ற போது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார் இந்த இரு சம்பவங்களும் திருவாரூர் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கமலாலயக் குளத்தின் தெற்கு கரையில் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த 15 அடி உயரம் கொண்ட ஒரு அலங்கார தூண் சரிந்து விழுந்தது நல்லவேளையாக அந்த சமயத்தில் தெப்பம் இல்லாத காரணத்தினால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.
கோவில் தெப்பத் திருவிழாவில் இரு உயிர்கள் பலியான சம்பவம் குறித்து ஏதும் அபசகுனமாக இருக்குமோ என்ற பதற்றமும் மக்களிடையே நிலவி வருகிறது, மேலும் சமீப காலமாக தமிழக அரசு நடத்தும் கோவில் திருவிழாக்களில் ஏதேனும் அசம்பாவிதம் காரணமாக உயிர்கள் பலியாவது குறித்தும் அச்சம் எழுந்துள்ளது.