ஜி -20 அமைப்பில் உணவு எரிசக்தி பாதுகாப்பு பிரச்சனையை எழுப்புவோம் - மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்!
ஜி - 20 அமைப்பில் 'உணவு பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு பிரச்சனையை எழுப்புவோம்' என்று மதிய மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்தார்.
By : Karthiga
அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேஷியா, இத்தாலி ஜப்பான் , தென்கொரியா, மெக்ஸிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா , துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 19 நாடுகளும் இடம்பெற்றுள்ள ஜி-20 என்ற அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா நேற்று ஏற்றுள்ளது. இந்த நாடுகள் உலகின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் 85 சதவீத பங்கு வகிக்கின்றன. உலக வர்த்தகத்தில் 75% பங்களிப்பை கொண்டுள்ளன. உலக மக்கள் தொகையில் மூன்றில் இரு பங்கை கொண்டிருக்கின்றன.இந்த ஜி- 20 அமைப்பின் உச்சி மாநாடு அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்க உள்ளது. இதயொட்டி நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
அந்த வகையில் இதில் பல்கலைக்கழகங்களை இணைப்பதற்கான நிகழ்ச்சி டெல்லியில் சுஷ்மா சுவராஜ் பவனில் நேற்று நடந்தது. இதில் பல்கலைக்கழக மானிய குழுவின் தலைவர் ஜெகதீஷ் குமார், 'ஜி- 20' யின் 'ஷெர்பா' அமிதாப் காந்த், இந்தியாவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஹர்ஷ்வர்தன் சிறிங்கலா, பிரதமரின் முதன்மைச் செயலாளர் பி.கே.மிஸ்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் பேசியபோது கூறியதாவது:-
ஜனநாயகத்தின் தாய் இந்தியா அந்த வகையில் ஜி - 20 அமைப்பின் தலைமை ஆலோசனை நடத்துவதாக இருக்கும். அது ஒத்துழைப்பு தருவதாக இருக்கும். அது தீர்க்கமானதாக இருக்கும். 'ஜி-20' தலைமை பொறுப்பை இந்தியா சர்வதேச விவகாரங்களில் மிக முக்கியமான தருணத்தில் வீற்றிருக்கிறது.உலக தலைவர்கள் சரியான பிரச்சினைகளில் கவனம் செலுத்துவது மிகவும் இன்றியமையாதது. குறிப்பாக உலகில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளை பாதிக்கும் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவது மிகவும் இன்றியமையாதது ஆகும்.