மேற்கு வங்கத்தில் கையில் பணம் இல்லாததால் தாயின் உடலை சுமந்து சென்ற பரிதாபம்
மேற்கு வங்காளத்தில் ஆம்புலன்ஸ்க்கு கூடுதல் கட்டணம் தர முடியாமல் மருத்துவமனையில் இருந்து தாயின் உடலை வீட்டுக்கு மகன் தோளில் வைத்து சுமந்து சென்ற பரிதாபம் அரங்கேறி உள்ளது.
By : Karthiga
மேற்கு வங்காள மாநிலம், ஜல்பாய்குரி மாவட்டத்தில் உள்ள கிராந்தி கிராமத்தைச் சேர்ந்தவர் ராம் பிரசாத் தெவன் 72 வயதான இவரது தாயார் , சுவாச கோளாறு பிரச்சனையால் அவதிப்பட்டார். இதை அடுத்து ராம்பிரசாத் தெவன் தனது தாயாரை ஜல் பாய்குறி மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கடந்த புதன்கிழமை கொண்டு போய் சேர்த்தார். ஆனால் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் அடுத்த நாளே உயிரிழந்தார் . அங்கிருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அவரது சொந்த ஊருக்கு தாயாரின் உடலை எடுத்துச் செல்வதற்கு ஆம்புலன்ஸ் கட்டினமாக மூன்றாயிரம் கேட்டிருக்கிறார்கள். பாவம் அவரிடம் அவ்வளவு பணம் இல்லை. உடனே அவர் தனது தாயாரின் உடலை ஒரு போர்வையில் வைத்து சுருட்டி தனது தோளில் வைத்த சுமந்து கொண்டு சொந்த ஊரை நோக்கி நடக்க ஆரம்பித்தார். அதன் இன்னொரு பகுதியை வயதான அவரது தந்தை சுமந்தவாறு பின் தொடர்ந்தார். இந்த காட்சி நெஞ்சை நொறுக்குவதாக அமைந்தது. அத்துடன் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது. இதை அடுத்து சமூக சேவை நிறுவனம் ஒன்று இலவசமாக ஆம்புலன்ஸ் வசதி செய்து தந்து ராம்பிரசாத் தெவன் தாயார் உடலை வீட்டுக்கு கொண்டு போய் சேர்த்துள்ளது. இது பற்றி ராம்பிரசாத் தெவன் கூறியதாவது:-
எங்கள் அம்மாவை ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்ததற்கு ஆம்புலன்ஸ் கட்டணமாக ரூபாய் 900 கொடுத்தோம். ஆனால் அம்மாவின் உடலை வீட்டுக்கு எடுத்துச் செல்வதற்கு ரூபாய் 3000 கேட்டனர். எங்களால் அவ்வளவு பணம் கொடுக்க முடியவில்லை. எனவே அம்மாவின் உடலை படுக்கை விரிப்பில் சுற்றி என் தோளில் வைத்து சுமந்து கொண்டு நடக்க ஆரம்பித்தேன். என் வயதான அப்பா என்னை பின்தொடர்ந்து வந்தார். இவ்வாறு அவர் கூறினார் . இது பற்றி அந்த ஆஸ்பத்திரியின் சூப்பிரண்டு கல்யாண் கான் கூறுகையில் "இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. எங்களுக்கு தெரிந்திருந்தால் அவர்களுக்கு பிண ஊர்தி ஏற்பாடு செய்திருக்க முடியும். பாவம் அவர்களுக்கு இதுகுறித்து தெரியாமல் போய்விட்டது. அவர்கள் எங்களை தொடர்பு கொள்ளவும் இல்லை" என தெரிவித்தார் . இலவச ஆம்புலன்ஸ் வசதியை பாதி வழியில் ஏற்படுத்தி தந்த சமூக சேவை நிறுவனத்தின் நிர்வாகி கூறும் போது "இதுபோன்ற இலவச ஆம்புலன்ஸ் சேவை வழங்குவதை மருத்துவமனை அருகே கூட ஆம்புலன்ஸ் ஆபரேட்டர்கள் அனுமதிப்பதில்லை" என வேதனை தெரிவித்தார்.