'மதங்களுக்கு எதிரி இல்லை' என்று கூறும் முதலமைச்சர் இனி இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வாரா? - வானதி சீனிவாசன் சுளீர்!
மதங்களுக்கு எதிரி இல்லை என்று கூறும் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் இனி இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வாரா? என்று வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.
By : Karthiga
பா.ஜ.க மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னையில் கடந்த ஐந்தாம் தேதி நடந்த விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "திராவிடம் என்ற சொல்லை பிடிக்காதவர்கள் எங்களை மதத்தின் விரோதிகளாக சித்தரிக்கிறார்கள். நாங்கள் மதவாரத்துக்கு தான் எதிரிகளை தவிர, மதத்துக்கு எதிரிகள் அல்ல. மதம் - சாதி வேற்றுமை மட்டுமல்ல , கோவில் - சாமி வேற்றுமையும் திராவிட மாடல் அரசுக்கு இல்லை" என்று பேசி இருந்தார். நாங்கள் மதவாதத்துக்குதான் எதிரி, மதங்களுக்கு அல்ல என்று முதலமைச்சர் கூறியிருக்கிறார். மதங்களுக்கு எதிரி இல்லை என்றால் வாழ்த்து சொல்ல மறுப்பது ஏன்? என்பதற்கு முதல் அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும். மற்ற மத பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வது மட்டுமல்ல , அவர்களின் மத நிகழ்வுகளிலும் முதல் - அமைச்சர் உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொள்கின்றனர் .
கடந்த மாதம் கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய முதல் அமைச்சரின் மகனும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நானும் கிறிஸ்தவன்தான் நான் காதலித்து மணந்த மனைவியும் கிறிஸ்தவர் தான் என பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார். அதுபோல தி.மு.க.வில் இருக்கும் மற்ற தலைவர்களும் அமைச்சர்களும் நாங்கள் இந்துக்கள் என்று சொல்ல தி.மு.க தலைமை அனுமதிக்குமா? தி.மு.க என்பது இந்த விரோத கட்சி என்பதை அக்கட்சி ஒவ்வொரு முறையும் நிரூபித்து வருகிறது. குறைந்தபட்சம் இந்த பண்டிகைகளுக்கு கூட வாழ்த்து சொல்ல மனம் இல்லாத முதலமைச்சர் நாங்கள் மதங்களுக்கு எதிரி அல்ல என்று சொல்வது வழக்கம்போல இந்துக்களை ஏமாற்றம் தந்திரம் தான். இதனை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.
இனியும் இதுபோன்ற வார்த்தை ஜாலங்களால் மக்களை ஏமாற்ற முடியாது. நாங்கள் மதங்களுக்கு எதிரி இல்லை என்பது முதலமைச்சரின் உள்ளத்திலிருந்து வந்திருந்தால் இனி இந்த மத பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்ல வேண்டும். மற்ற மதங்களின் கோவில்கள் , மடங்களில் தலையிடாத மதச்சார்பற்ற அரசு, இந்து மத கோவில்கள் , மடங்களில் தலையிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அதுதான் மதங்களை மதிப்பது. அதுதான் உண்மையான மதச் சார்பின்மை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.