கேரளாவில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட பெண் அரசு அதிகாரி கைது
கேரளாவில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட பெண் அரசு அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.
By : Karthiga
கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த மீன்பிடி உபகரணங்கள் விற்பனை செய்யும் ஒருவர் நேற்று முன்தினம் அங்குள்ள ஒரு வங்கியில் ரூபாய் 50 ஆயிரம் முதலீடு செய்வதற்காக சென்றார். அவர் கொடுத்த பணத்தை வங்கி அதிகாரிகள் பரிசோதனை செய்தனர்.
அப்போது அதில் ரூபாய் 500 நோட்டுகளில் ஏழு கள்ள நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே இது பற்றி வங்கி அதிகாரிகள் ஆலப்புழா தெற்கு போலீஸ் நிலையத்துக்கு தெரிவித்தனர். அதன் பெயரில் போலீசார் விரைந்து வந்து அந்த வியாபாரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் தான் கொடுத்த பணத்தில் கள்ள நோட்டுகள் இருந்தது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்தார். மேலும் அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர் . அப்போது அந்த பணத்தை திருவல்லா அருகே உள்ள எடத்துவா விவசாயத்துறை அதிகாரியான ஜிஷா மோள் என்பவர் கொடுத்ததாக அவர் கூறினார்.
இதை அடுத்து போலீசார் ஜிஷா மோளை கைது செய்து விசாரணை நடத்தினர் . அதில் கள்ள நோட்டுகள் எப்படி கிடைத்தது என்பது குறித்த விவரத்தை அவர் போலீசாரிடம் தெரிவிக்கவில்லை . இது குறித்து போலீசார் தொடர்ந்து அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள் .இதற்கிடையே கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட சம்பவத்தில் பெண் அரசு அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.