அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலுக்கு 1000 கோடியில் சாலை வசதி - அசத்தும் யோகி ஆதித்யநாத்
உத்திர பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலை எளிதில் அடையும் நோக்கில் விரிவான சாலை வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக ஆயிரம் கோடி திட்டத்திற்கு யோகி ஆதித்யநாத் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
By : Karthiga
உத்திரபிரதேசத்தின் அயோத்தியில் ராமபிரான் பிறந்த இடத்தில் அவருக்கு பிரம்மாண்ட கோவில் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. மூன்று தளங்களுடன் 161 அடி உயரம் கொண்ட இந்த கோவில் 2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில் பக்தர்களின் வழிபாட்டுக்கு திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கோவில் கட்டுமான பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க கோவிலை ஒட்டி உள்ள பகுதிகளை மேம்படுத்தும் பணிகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக அயோத்தியை சர்வதேச சுற்றுலாத்தலமாக மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பல்வேறு இடங்களில் இருந்து ராமர் கோவிலை எளிதாக அடையும் வகையில் சாலை கட்டமைப்பை மேம்படுத்த அரசு முடிவு செய்தது. இதற்காக ஆயிரம் கோடியில் மெகா திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
நிலம் கையகப்படுத்துதல், குடியிருப்பாளர்கள், கடை உரிமையாளர்களின் மறுவாழ்வு மற்றும் புதிய கட்டிடங்கள் கட்டுதல், சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக இந்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு உத்தரபிரதேச அரசு ஒப்புதல் அளித்துள்ளது. முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையில் நடந்த பொதுக்கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது . இது குறித்து அரசின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், இந்த திட்டத்தின் மூலம் ராமச்சந்திர பூமிக்கு செல்லும் அனைத்து சாலைகளும் விரிவு படுத்தப்பட்டு அழகுபடுத்தப்பட்டு ராபிரானை தரிசிப்பதற்கு பக்தர்களுக்கு அழகிய சூழல் உருவாக்கப்படும் என்று கூறினார்.
இதில் முக்கியமாக சுக்ரீவர் கோட்டையிலிருந்து ராமஜென்ம பூமி வரையான 566 மீட்டருக்கு பக்தர்களின் வசதிக்காக நான்கு வழி சாலை அமைக்கப்படுகிறது. இதற்கு ஜென்ம பூமி பாதை என்று பெயரிடப்பட்டுள்ளது. இதற்காக ரூபாய் 83.33 கோடிக்கு யோகி ஆதித்யநாத் அரசு ஒப்புதல் அளித்து இருப்பதாக அரசு வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.