உலகத்தரத்தில் சுற்றுலாத்தலமாகும் ராமர் பிறந்த இடம் - யோகி ஆதித்யநாத் உறுதி
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளை யோகி ஆதித்யநாத் ஆய்வு செய்தார். ராமர் பிறந்த இடத்தை சர்வதேச சுற்றுலாத்தலமாக்க உறுதி பூண்டு இருப்பதாக கூறினார்.
By : Karthiga
உத்திரபிரதேச மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் நேற்று அயோத்திக்கு சென்றார். ராமஜென்ம பூமியிலும், அனுமன் கோவிலிலும் சாமி தரிசனம் செய்தார். சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி நடக்கும் ராமர் கோவில் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார்.டெதிபஜார் பகுதிக்கு சென்று பல்வேறு திட்ட பணிகளை முன்னேற்றத்தை பார்வையிட்டார். பின்னர் அயோத்தியில் 157 கோடி மதிப்புள்ள வளர்ச்சி திட்டங்களை யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார்.அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது :-
500 ஆண்டுகால காத்திருப்புக்கு பிறகு அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது.இதற்கு பிரதமர் மோடியின் வலிமையான மன உறுதியே காரணம்.2017 ஆம் ஆண்டுக்கு முன்பு அயோத்தி இருளில் மூழ்கி கிடந்தது. தற்போது எல்.இ.டி விளக்குகளால் ஒளிர்கிறது.தடையற்ற மின்சாரம் கிடைக்கிறது. இரட்டை எஞ்சின் அரசு அயோத்தியை மாநகராட்சியாக உயர்த்தி உள்ளது. அயோத்தியின் மேம்பாட்டுக்காக ரூபாய் 30,000 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் ஒப்புதல் அளித்துள்ளன.
உலகத்தர வசதிகளுடன் அயோத்தியை மத, வேத, ஆன்மீக நகராக உருவாக்க உறுதிபூண்டுள்ளோம்.அது மட்டுமின்றி ராமர் பிறந்த இடத்தை சர்வதேச சுற்றுலாத்தலமாக்க உறுதிபூண்டுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.