மறைந்த நடிகர் விவேக் ஜாதியை குறிப்பிட்டு இரங்கலை தெரிவித்த "மானமிகு ஆசிரியர் கி.வீரமணி" - இறப்பிலும் ஜாதி பார்க்கும் திராவிடர் கழகம்!

தமிழகத்தில் ஈ.வே.ராமசாமி ஜாதியை ஒழித்தார், தமிழகத்தில் ஈ.வே.ராமசாமி ஜாதி கொடுமைகள் வழக்கொழிந்திட பாடுபட்டார், ஜாதிய வேறுபாட்டை அறவே இல்லாமல் ஈ.வே.ரா மாற்றினார், இது ஈ.வே.ரா மண் ஆகையால் இங்கு ஜாதி கிடையாது என விதவிதமாகவும், அடுக்குமொழி சொற்றொடர்கள் அமைத்தும் திராவிடர் கழகம் இன்று வரை ஈ.வே.ராமசாமியை "மார்க்கெட்டிங்" எனப்படும் புகழ்படுத்தி வருகிறது.
ஏன் இன்னும் சொல்லப்போனால் தமிழகத்தில் ஈ.வே.ரா இல்லையென்றால் தமிழன் இடுப்பு கச்சை கட்ட கூட தெரியாமல் வாழ்ந்திருப்பான் என்கிற ரீதியில் திராவிடர் கழகத்தினர் ஈ.வே.ராமசாமியை உருவகப்படுத்தி வருகின்றனர். போதாக்குறைக்கு "பெரியார்" என்ற அடைமொழியுடன்.
இப்படியாக கற்பனையில் தமிழகத்தில் ஜாதியை ஒழித்த பெரியாரின் இயக்கமான "திராவிடர் கழக மானமிகு ஆசிரியர் கி.வீரமணி" இன்றைக்கு ஒரு திரைப்பிரபலம் இறந்ததை முன்னிட்டு இரங்கல் செய்தியில் அவரின் ஜாதியை குறிப்பிட்டது "திராவிடர் கழகத்தின்" ஜாதி வெறியை அப்பட்டமாக காண்பித்துள்ளது.
அந்த வகையில் இன்று அதிகாலை மாரடைப்பின் காரணமாக நடிகர் விவேக் மரணமடைந்தார். நேற்றே அவர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அதனைதொடர்ந்து தீவிர சிகிச்சையளித்தும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் உயிர் பிரிந்தது.
இதனை தொடர்ந்து பல்வேறு திரைத்துரையினரும், அரசியல் பிரமுகர்களும், சினிமா ரசிகர்களும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இதனையடுத்து தன் பங்கிற்கு தனது முகநூல் பக்கத்தில் இரங்கல் செய்தி வெளிட்ட திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி கூறியதாவது, "சிறந்த நகைச்சுவை நடிகரும், சீரிய சமூகப் பற்றாளருமான நண்பர் விவேக் அவர்கள் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (17.4.2021) அதிகாலை உயிரிழந்தார் என்று பேரதிர்ச்சியான செய்தி நம்மை பெரும் வருத்தத்துக்கு ஆளாக்குகிறது.
பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்து, அரசுப் பணியில் இருந்தபடி கலைத் துறையில் நுழைந்து, பின்னர் திரைத் துறையில் பெரு வெற்றி பெற்ற நடிகர் விவேக் அவர்கள் சமூக சீர்திருத்தக் கருத்துகளைத் தன் படங்களில் வெளிப்படுத்தி, அதையே தன் அடையாளமாகவும் மாற்றிக் கொண்டவர்" என குறிப்பிட்டு இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.
அதாவது இன்று மறைந்த நடிகர் விவேக் அவர்கள் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர் என இங்கு குறிப்பிட வேண்டிய அவசியமே இல்லை! மேலும் இன்று அவருக்காக கண்ணீர் சிந்தி இரங்கல் தெரிவிக்கும் அனைவரும் அவர் என்ன சமூகத்தை சேர்ந்தவர் என பார்க்கவும் இல்லை. ஆனால் நாங்கள் தான் தமிழகத்தில் ஜாதியை ஒழித்தோம் என போலியாக மார்தட்டி, தோள் தூக்கி வலம் வரும் திராவிடர் கழகம் இன்னு இறந்த ஒருவரின் சமூகத்தை குறிப்பிடுவது எந்த "சாதி ஒழிப்பு" வகையில் வருகிறது?
இவர்கள் ஜாதியை வைத்து அரசியல் செய்வதால்தான் ஜாதி ஒழியவில்லை என்பதை இன்னமும் புரிந்துகொள்ளாமல் இருப்பது வேதனையளிக்கிறது.