ஆபத்து காலத்தில் ஆக்ஸிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதில் தவறில்லை - பா.ஜ.க துணைத்தலைவர் அண்ணாமலை!

நாட்டில் தற்பொழுது கொரோனோ'வின் கொடிய தாக்கம் நிலவி வருவதால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் ஆக்ஸிஜன் உற்பத்திக்காக திறக்க வேண்டும் என பா.ஜ.க துணைத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பழநி'யில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, "கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நான் தற்போது குணமாகிவிட்டேன். மீண்டும் மக்கள் பணியில் ஈடுபடும் முன்பு முருகனைத் தரிசிக்க பழநி வந்தேன். நாட்டில் ஆக்சிஜன் உற்பத்தியில் தன்னிறைவு பெறும் வசதிகள் இருந்தும்கூட அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஆக்சிஜன் பெற இந்தியாவின் தூதரக அதிகாரிகள் பேசி வருகிறார்கள். இதற்கு எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளின் செயலே காரணம்.
ஸ்டெர்லைட் ஆலையில் இயல்பாகவே ஆக்சிஜன் தயாரிக்கும் வசதி உள்ளது. என்றாலும் உற்பத்தி செய்யவிடாமல் அரசியல் செய்கிறார்கள். இந்த விவகாரத்தில் அரசியல் கட்சிகள் மிகப் பிற்போக்காக நடந்கின்றன. தற்போது நாட்டின் அவசரம் கருதி ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என்பதே என்னுடைய கருத்து" என கூறினார்.
மேலும், "கொரோனா தடுப்பூசி செலுத்துவதில்கூட தவறான கருத்தைப் பரப்பி, பொதுமக்களை தேவையில்லாமல் பீதிக்கு உள்ளாக்கி, தடுப்பூசி வீணாகவும் காரணமாக இருக்கிறார்கள் எதிர்கட்சிகள்" எனவும் அவர் கூறினார்.