வாக்கு எண்ணிக்கைக்கு தடையா? திடீரென சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

By : Mohan Raj
தமிழக சட்டமன்றத்துக்கு கடந்த ஏப்ரல் 6 ம் தேதி நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள், மே 2ம் தேதி எண்ணப்பட உள்ளன. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என ஓர் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதனை புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது, "தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் பண பலத்தை தடுக்க இரு தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவர் என தேர்தல் அறிவிப்பின்போது தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்ததாகவும், இருந்த போதும் தமிழகத்தில் தி.மு.க, அ.தி.மு.க கட்சிகளின் சார்பில் பணபட்டுவாடா நடந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "பல தொகுதிகளில் நடந்த பணபட்டுவாடா தொடர்பாக தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், தமிழகத்தில் மட்டும் 430 கோடி ரூபாயை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்துளாதாகவும் கூறியுள்ளார்.
எனவே இது தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதி அடங்கிய குழுவை நியமித்து விசாரணை நடத்தக் கோரியும், வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க கோரியும் கிருஷ்ணசாமி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதன் விசாரணை மிக விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
