யாரும் என்ன சந்திக்க வரவேண்டாம் என கடிதம் எழுதிய தி.மு.க அமைச்சர் - கொரோனோ பயம் காரணமா?

யாரும் என்னை சந்திக்க வரவேண்டாம் என அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தி.மு.க உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, "மதுரை மத்திய சட்டமன்ற தொகுதியிலிருந்து உங்களின் பேராதரவோடும், பெரும் உழைப்போடும், அன்னை மீனாட்சியின் அருளாசியோடும், வெற்றி பெற்ற நான், தமிழகத்தின் நிதி அமைச்சராக பொறுப்பு ஏற்றிருக்கிறேன். ஆயிரக்கணக்கான ஆருயிர் உடன்பிறப்புகளின் அயராத உழைப்பின் மூலம் கிடைத்த வெற்றியால் இது சாத்தியமானது.
எம்.எல்.ஏ.வாக மதுரையிலிருந்து புறப்பட்டு வந்த என்னை நிதி அமைச்சராக மீனாட்சி ஆளும் மதுரைக்கு அனுப்பி வைத்திருக்கிறார் நமது நெஞ்சமெல்லாம் நிறைந்த தலைவர் மு.க.ஸ்டாலின். அமைச்சர் என்ற முறையில் என்னை சந்தித்து தங்களின் மகிழ்ச்சியையும், அன்பையும் வெளிப்படுத்த தாங்கள் ஒவ்வொருவரும் காத்திருப்பதை நான் நன்கறிவேன்.
வியர்வை சிந்தி உழைத்த உடன்பிறப்புகளை அய்யாவின் இல்லத்துக்கு அழைத்து அளவளாவ வேண்டும் என்ற ஆசை எனக்கு இல்லாமல் இல்லை. ஏன் இன்னும் வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் உங்களை எல்லாம் அழைத்து விருந்தளித்து நானும் தங்களில் ஒருவனாக அமர்ந்து சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் கூட எனக்கு இருந்தது.
ஆனால் நம் தமிழக முதல்வர் தலைவர் ஸ்டாலின் அவர்கள் என்னை ஊரடங்கு நடைமுறைப்படுத்துதல், கொரொனா நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சைப் பணிகளை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வை செய்யவும் நியமித்துள்ளதால் அது தொடர்பான பணிகளை முடுக்கிவிடும் பொருட்டு மாவட்டம் முழுக்க உள்ள மருத்துவமனைகள், சிகிச்சை மையங்கள், கண்காணிப்பு அலுவலகங்களுக்கு நேரடி ஆய்வுக்கு செல்ல உள்ளேன்.
அக்கறையோடும், பாசத்தோடும் கேட்டுக்கொள்கிறேன்.தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான நமது அரசு கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முன்னெடுத்துள்ள முழு ஊரடங்கை முறையாக நாம் அனைவரும் பின்பற்றி கொரோனா இல்லா தமிழகம் என்ற நிலையை உருவாக்குவோம்.
இதுவும் கடந்து போகும் என்பதற்கேற்ப எல்லாம் சில நாட்கள் தான். அதற்கு பிறகு இந்த அடியானை காண, கோரிக்கைகளை முன்வைக்க குறைகளை எடுத்துக் கூற எப்போது வேண்டுமானாலும் தாங்கள் வரலாம். ஆகையால் தற்போது முழு ஊரடங்கு முடியும் வரை கழக உடன்பிறப்புகள், ஆருயிர் தம்பிமார்கள், நிர்வாகிகள் என யாரும் என்னை சந்திப்பதற்காக வந்து தங்கள் உடல்நலத்தை வருத்திக் கொள்ளவேண்டாம் கேட்டுக்கொள்கிறேன்" என அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.