திருவண்ணாமலை மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுத்த காவல் அதிகாரிக்கு தலையில் அரிவாள் வெட்டு!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே மணல் கடத்தலை தடுக்கச் சென்ற தலைமைக் காவலர் அங்குள்ள ரவுடிகளால் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வந்தவாசி அடுத்த கீழ்கொடுங்கலூர் அருகே உள்ளது சுகநதி ஆறு. இதில் மணல் கடத்தல் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, கீழ்கொடுங்கலூர் காவல்நிலையத்தின் தலைமைக் காவலரான குமார் தனது காவலர் குழுவுடன் சேர்ந்து மணல் கடத்தலை தடுக்க முயன்றுள்ளார்.
அந்த சமயம் கடத்தலில் ஈடுபட்டவர்கள், காவலர் குமாரின் தலையில் அரிவாளால் வெட்டிவிட்டு, தப்பிச் சென்றனர். இதில் படுகாயம் அடைந்த காவலர், வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், திருவண்ணாமலை காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் மற்றும் துணை கண்காணிப்பாளர் தங்கராமன் இவரும், சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
இதனை தொடர்ந்து மதுராந்தகம் அருகே பசுவாங்கரணை ஆற்றில் பதுங்கி இருந்த குற்றவாளிகள் மூவரையும் கைதுசெய்த தனிப்படை போலீசார், மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்கள் மற்றும் காவல்துறையினர் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Source - Thanthi TV