"தமிழிசை புதுவை ஆளுநராக கலக்கி வருகிறார்" பாராட்டும் புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம்!

"தமிழிசை புதுவை ஆளுநராக கலக்கி வருகிறார்" என்கிற ரீதியில் பெரிதும் பாராட்டியுள்ளார் புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம்.
இன்று புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த வைத்திலிங்கம் கூறியதாவது, "கடந்த ஒரு மாதமாக புதுச்சேரியில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனால், இறப்பும் அதிகமாக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவ வசதியைப் பெற இங்கும், அங்குமாக ஓடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்த சூழலில் உயிர் இழப்புக்கும் பொதுமக்கள் ஆளாகின்றனர்.
தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் மகள்தான் தமிழிசை. அவர் புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக இருப்பதால் ஆட்சியாளர்கள் செய்யாததை முனைந்து செய்து வருகிறார். தன்னுடைய அதிகார எல்லையைத் தாண்டி செய்கிறார். அதனால் அவர் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர். ஆனால், மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் எதையும் செய்யவில்லை. பாதிக்கப்பட்டோரைச் சந்திக்காததன் காரணத்தை அவர்கள் சொல்ல வேண்டும். ஆறுதல் சொல்வதற்குக்கூட இந்த அரசு செயல்படவில்லை" என எம்.பி.வைத்தியலிங்கம் கூறினார்.