Kathir News
Begin typing your search above and press return to search.

'இறப்புச் சான்றிதழில் கொரோனா தொற்றால் இறந்தார்கள் எனக் குறிப்பிடுவதில்லை' - எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு!

இறப்புச் சான்றிதழில் கொரோனா தொற்றால் இறந்தார்கள் எனக் குறிப்பிடுவதில்லை - எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு!

ParthasarathyBy : Parthasarathy

  |  8 Jun 2021 12:39 PM GMT

தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கொரோனா நோய் தோற்றால் இறந்தவர்களின் இறப்பு சான்றிதழில் கொரோனா நோயால் இறந்தவர்கள் என்று குறிப்பிடுவதில்லை என்று குற்றம்சாட்டி உள்ளார். இதனால் இறந்தவர்களை அவர்களது வீட்டிற்க்கே எடுத்து சென்று இறுதி சடங்கு செய்வதால் மேலும் கொரோனா பரவும் அபாயம் இருக்கிறது.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "கொரோனா நோய் தொற்றின் காரணமாக நேற்று (ஜூன் 7) வரை இறந்தவர்களின் எண்ணிக்கை 27,356 ஆகும். கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்றால் இறக்க நேரிட்டவர்களுக்கு, அவர்களது இறப்புச் சான்றிதழில் கொரோனா நோய் தொற்றால் இறந்தார்கள் எனக் குறிப்பிடுவதில்லை. மாறாக, வேறு காரணங்களால் இறந்தார்கள் என இறப்புச் சான்றிதழ் தருவதாக மாநிலம் முழுவதும் பல்வேறு புகார்களை பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்து வருகின்றனர். இதனால், கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்து வாழும் குழந்தைகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவித்துள்ள நிவாரண உதவிகள் கிடைப்பதில்லை என புகார் கூறியுள்ளனர்.


மேலும், இவ்வாறு சான்றிதழ் தருவதால், ஒருசிலர் இறந்தவர்களது உடல்களை வீட்டிற்கு எடுத்துச்சென்று உற்றார் உறவினர் கலந்துகொள்ளும் வகையில் இறுதிச் சடங்கை மேற்கொள்கின்றனர். நேற்று உச்சநீதிமன்றத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலையில் உள்ள குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி குறித்த வழக்கு விசாரணையின்போது ‛அனைத்து மாநில அரசுகளும், மாவட்ட அதிகாரிகள் வாயிலாக குழந்தைகளை கணக்கெடுத்து, 24 மணி நேரத்திற்குள் சிறார் நலக் குழுக்களுக்கு தெரிவிக்க வேண்டும்' என உத்தரவிட்டுள்ளது என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.


எனவே, தமிழக அரசு, கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்கள் இறக்க நேரிட்டால், அவர்களது இறப்புச் சான்றிதழில் கொரோனா நோய்தொற்றினால்தான் அவர்கள் இறந்தார்கள் என்ற சரியான காரணத்தை குறிப்பிட்டு சான்றளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். மேலும்,கொரோனாவால் பெற்றோரை இழந்து வாழும் குழந்தைகளுக்கு, அரசு அறிவித்துள்ள நிவாரண உதவிகள் சரியான முறையில் சென்றடைவதையும், கொரோனா வழிமுறைகளை பின்பற்றி இறந்தவர்களது உடல்கள் அடக்கம் செய்யப்படுவதையும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்." என்று இ.பி.எஸ் குறிப்பிட்டு உள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News