முதல்வர் ஸ்டாலின் எங்களை கண்டுக்கொள்வதே இல்லை - குமுறும் அரசு மருத்துவர்கள்!

எதிர்கட்சியாக இருக்கும்போது குடுத்த வாக்கை காப்பாற்றுவாரா முதல்வர் ஸ்டாலின் என அரசு மருத்துவர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
"அடுத்து தி.மு.க ஆட்சி தான் வரப்போகிறது. உங்கள் கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும்" என கடந்த ஆண்டு அக்டோபரில் ஊதிய உயர்வு உள்ளிட்ட நான்கு முக்கியமான கோரிக்கைகளுடன், சென்னை ராஜீவ் காந்தி பொது மருத்துவமனை முன்பு 'சாகும்வரை உண்ணாவிரதம்' இருந்தனர் அரசு மருத்துவர்கள். பல தலைவர்கள் அவர்களுக்கு ஆதரவைத் தெரிவித்தனர். அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் 2020, அக்டோபர் 28-ம் தேதி அங்கு சென்று, மருத்துவர்களின் அருகில் சம்மணமிட்டுத் தரையில் அமர்ந்து இப்படி உறுதி கொடுத்தார்.
அரசு மருத்துவர்கள் கோரிக்கை குறித்து அரசு மருத்துவர்களுக்கான சட்டக்குழுவின் தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை கூறுவதாவது, "'சுகாதாரத்துறையில் இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாகத் திகழ்ந்துவரும் தமிழ்நாட்டில், அரசு மருத்துவர்களுக்கு மற்ற மாநிலங்களைவிட குறைவாகவே ஊதியம் வழங்கப்படுகிறது. அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வை மறு ஆய்வு செய்வது தொடர்பாக, 2009-ம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் ஓர் அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி 2017-ம் ஆண்டு நடைபெறவேண்டிய மறு ஆய்வு நடைபெறவில்லை. அதனால் ஊதிய உயர்வு கிடைக்கவில்லை. எனவேதான், 2018-ம் ஆண்டு முதல் போராட்டத்தில் இறங்கினோம். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காக உயிரைப் பணயம்வைத்து அர்ப்பணிப்புடன் பணியாற்றிவருகிறோம். தொற்று ஏற்பட்டு, பணியிலிருந்த நான்கு அரசு மருத்துவர்கள் இதுவரை உயிரிழந்திருக்கிறார்கள். 'கொரோனா நேரத்தில் பல சிரமங்களுடன் பணியாற்றும் அரசு மருத்துவர்களின் ஊதியத்தை இரண்டு மடங்காக உயர்த்துவதாக' அரியானா அரசு அறிவித்துள்ளது. கர்நாடகாவில் போராட்டத்தைத் தொடங்குவதற்கு முன்னரே ஊதியக் கோரிக்கை நிறைவேறியது. தெலங்கானாவில் போராட்டம் தொடங்கிய 24 மணி நேரத்தில் ஊதிய உயர்வு வழங்கப்பட்டுவிட்டது. ஆனால், தமிழகத்தில் அரசு மருத்துவர்களைக் கண்டுகொள்ளவே இல்லை.
பி.பி.இ உடை அணிந்து, கொரோனா வார்டுக்குள் சென்று மருத்துவர்களுக்கு நம்பிக்கையூட்டினார் ஸ்டாலின். அதேபோல, தங்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையோடு களத்தில் கொரோனாவோடு போராடிக் கொண்டிருக்கிறார்கள் மருத்துவர்கள்.
Source - ஜுனியர் விகடன்