தி.மு.கவின் நீட் அரசியலால் அரசுப்பள்ளி மாணவர்களின் நீட் கனவு சிதைக்கப்படுகிறது - கொதிக்கும் சி.வி.சண்முகம்!
By : Mohan Raj
"நீட் தேர்வு ரத்து என்ற பெயரில் தி.மு.க அரசு மாணவர்களை ஏமாற்றி வருகிறது" என தி.மு.க'வின் ஏமாற்று நீட் போராட்டம் தொடர்பாக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் போது கூறுகையில், "நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராய அரசு குழு அமைத்துள்ளது ஏமாற்றுவேலை. நீட் தேவையில்லை என்பதுதான் அ.தி.மு.க'வின் நிலைப்பாடு. நீட் தேர்வு வேண்டாம் என்று நாடாளுமன்றத்தில் தான் சட்டம் இயற்ற வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை.
நீட் தேர்வு ரத்து என்ற பெயரில் தி.மு.க அரசு மாணவர்களை ஏமாற்றி வருகிறது. 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உதவியாக இருந்தது. அ.தி.மு.க அரசு கொண்டு வந்த பிறகு 450 மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். நீட் தேர்வு இல்லாத போது 10 ஆண்டில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்கள் வெறும் 74 பேருக்கு மட்டுமே இடம் கிடைத்துள்ளது. ஆனால், அ.தி.மு.க அரசின் ஆக்கப்பூர்வ நடவடிக்கையால் அரசு பள்ளி மாணவர்கள் 450 பேர் மருத்துவ படிப்பில் சேர்ந்து பலனடைந்தனர்.
தமிழ்நாட்டில் மோடி வந்தால் போராட்டம் நடத்துவதை விட்டுவிட்டு டெல்லி சென்று தி.மு.க எம்.பி.க்கள் போராட வேண்டும், தி.மு.க அரசின் முயற்சியால் அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவு பாதிக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.