'லாக்டவுன் இருக்கட்டும் நீங்க கடையை தொறங்க' என வாய் மொழி உத்தரவு பிறப்பித்தாரா அமைச்சர் செந்தில் பாலாஜி?

"நீங்க கடைய தொறங்க" என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாக வியாபாரிகள் கூறியதையடுத்து கொரோனோ தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசின் உத்தரவை அமைச்சரே மீறியுள்ளதாக கரூர் வட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவும் வகையை அடிப்படையாக பிரித்து மாவட்டங்களை மூன்று வகையாகப்படுத்தி, ஊரடங்கைத் தளர்த்தியுள்ளது தமிழக அரசு. தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்கள் முதல் வகையில் உள்ளது. இந்த மாவட்டங்களில் நகை மற்றும் ஜவுளிக்கடை திறப்பதற்கு அனுமதியளிக்கவில்லை தமிழக அரசு. கரூரைவிடக் குறைவான நிலையில் கொரோனா வைரஸ் பரவல் உள்ள தஞ்சாவூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் இருக்கும் வணிகர்கள் கடைகளைத் திறக்க அனுமதி கேட்டும், அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அனுமதி வழங்க மறுத்துவிட்டன.
இந்தநிலையில், கரூரிலுள்ள முக்கிய வணிகப் பகுதியான ஜவஹர் பஜாரில் 30'ம் தேதி காலை திடீரென 50'க்கும் மேற்பட்ட நகை, ஜவுளி மற்றும் பாத்திரக் கடைகளைத் திறந்துவைத்து வியாபாரம் பார்த்தனர். இதை அறிந்த கரூர் வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்ரமணியம், விதிமுறைகளை மீறி இயங்கிய 20'க்கும் மேற்பட்ட கடைகளுக்கு தலா ரூ.5,000 அபராதம் விதித்தார். தன்னைச் சந்தித்த கரூர் வணிகர்கள் சிலர் வைத்த கோரிக்கையைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜி மறைமுகமாகக் கடைகளை திறக்க வாய்மொழியாக உத்தரவிட்டதாகப் பரவலாக பேசப்படுகிறது.
இது குறித்து, அந்தபகுதி சமூக ஆர்வலரான சண்முகம் கூறுகையில், "இங்குள்ள சில வணிகர்கள் செந்தில் பாலாஜியைச் சந்தித்து, தங்கள் வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டுள்ளதாகப் புலம்பியிருக்கின்றனர். அதனால், அவர் கடைகளை மதியம் 2 மணி வரை திறக்க வாய்மொழியாக உத்தரவிட்டதாகச் சொல்றாங்க. கரூர் மாவட்ட கலெக்டரிடமும் இதை வலியுறுத்திருக்கிறார். ஆனால், இதுதான் சான்ஸ் என்று நினைத்து 50-க்கும் மேற்பட்ட பெரிய நிறுவனங்கள் கடைகளைத் திறந்து, கூட்டத்தைக் கூட்டிவிட்டார்கள்" என போட்டு உடைத்துள்ளார்.
பின்னர் தலைமைச்செயலாளர் இறையன்பு தலையிட்டு கரூர் ஆட்சியரிடம், 'லாக்டெளன் அமலில் இருக்கும்போது, எப்படிக் கடைகளை திறக்க அனுமதிக்கலாம்? உடனே, கடையை மூடச் சொல்லுங்க' என்று என்று கடுகடுத்துள்ளார். அதன் பிறகே கரூர் கோட்டாட்சியர் பாலசுப்ரமணியம் திறந்திருந்த 20 கடைகளுக்கு தலா ரூ.5,000 அபராதம் விதித்ததோடு, எச்சரிக்கையும் செய்தார்" என கூறுகிறார் சமூக ஆர்வலர் சண்முகம்.
ஏற்கனவே மின்வெட்டு பிரச்சினையில் தமிழக மக்களின் வெறுப்பை சம்பாதித்துள்ள மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இப்பொழுது கூடுதலாக கரூர் பகுதி மக்களின் வெறுப்பையும் பெற்றுவிட்டதாக பரவலாக பேசப்படுகிறது.
Source - ஜூனியர் விகடன்.