Kathir News
Begin typing your search above and press return to search.

"மேகதாது குறித்து தமிழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த அவசியம் இல்லை" - கர்நாடகா காங்கிரஸ் தலைவர் திமிர் பேச்சு!

மேகதாது குறித்து தமிழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த அவசியம் இல்லை - கர்நாடகா காங்கிரஸ் தலைவர் திமிர் பேச்சு!

ParthasarathyBy : Parthasarathy

  |  6 July 2021 1:48 PM GMT

கர்நாடக அரசு காவிரி நதியின் குறுக்கே தண்ணீர் தேவைக்காகவும் மற்றும் மின்சாரம் உற்பத்தி செய்வதற்காகவும் மேகதாதுவில் தடுப்பணை கட்ட திட்டமிட்டுள்ளது. இது குறித்து கர்நாடக முதல்வர் எடியூரப்பா, மேகதாது அணை திட்டத்தை எதிர்க்க வேண்டாம் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார். அதற்கு ஸ்டாலின், கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை கை விட வேண்டும் என்று பதில் அளித்தார். மேலும் கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.


இந்த நிலையில் கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் மேகதாது அணை குறித்து கூறுகையில் "தமிழகத்தில் எந்த அரசு பதவிக்கு வந்தாலும் மாநில விவகாரத்தில் ஒன்றாக சேர்ந்து விடுகின்றனர். எனவே முதல்வர் எடியூரப்பாவும் நம் மாநிலத்தின் நலனை காக்க வேண்டும். மேகதாது அணை திட்டத்துக்கு உடனடியாக டெண்டர் அழைத்து பணிகளை துவங்க வேண்டும். உச்ச நீதிமன்றமும் கூட இதைத்தான் கூறியுள்ளது.


மேகதாது திட்டப்பணிகளை துவங்குவதை விட்டு தமிழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியம் இல்லை. மேகதாது திட்டம் பெங்களூருவின் தண்ணீர் தேவைக்கும் மற்றும் மின்சாரம் உற்பத்திக்கும் மிகவும் முக்கியமானது. எங்கள் அரசு இருந்த போதே இந்த மேகதாது தடுப்பணை திட்டம் வகுக்கப்பட்டது. மேலும் இந்த திட்டத்திற்கான சுற்றுச்சூழல் துறையின் அனுமதியும் கிடைத்துள்ளது. மேகதாது தடுப்பண்ணை திட்டம் என்பது நமது மாநிலத்தின் நலனுக்கான திட்டம். மேகதாது விஷயத்தில் முதல்வர் எடியூரப்பா தமிழக முதலமைச்சரிடம் வேண்டுகோள் விடுக்கிறார். இதுபோன்ற சமாதான பேச்சுக்கு செல்வது நமது மாநிலத்துக்கு கவுரவம் தரக்கூடியதல்ல." என்று அவர் கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News