மாறும் தமிழக அரசியல் களம் - பா.ஜ.கவா? தி.மு.கவா? அரசியலாகும் மோகன் பகவத் வருகை!
By : Mohan Raj
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் வருகை புரிவதையொட்டி தமிழகத்தில் பா.ஜ.க'வா? தி.மு.க'வா என்ற களயுத்தம் துவங்கியுள்ளது.
தமிழக அரசியல் களம் 2021 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு மாறி தற்பொழுது பா.ஜ.க'வா அல்லது தி.மு.க'வா என்ற நிலை எழுந்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் தி.மு.க ஆட்சிஅமைத்த பிறகு முதல் முறையாக தமிழகத்திற்கு ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் வருகை புரிய உள்ளார். மதுரை சத்யசாய் நகரில் கட்டப்பட்டுள்ள சாய் பாபா ஆலய திறப்பு விழா மட்டுமின்றி ஏராளமான விழாக்கள், நிகழ்ச்சிகளில் மோகன் பகவத் பங்கேற்க இருக்கிறார். இதற்காகவே நான்கு நாள் பயணமாக அவர் மதுரை வருகிறார். இதனை அடுத்து மதுரை மாநகர் முழுவதுமே போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மதுரை மாநகராட்சியின் உதவி ஆணையர் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த சுற்றறிக்கை தான் தற்போது விவகாரமாகியுள்ளது. அதாவது மோகன் பகவத் மதுரை வர உள்ளதால் விமான நிலையம் முதல் அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் எங்கெங்கு நடைபெறுகிறது என்பதை அறிந்து சாலைகளை சீரமைத்தல், தெரு விளக்குகளை பராமரித்தல், சாலைகளை சுத்தமாக வைத்திடல் போன்ற பணிகளை செய்ய வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் மாநகராட்சி பணியாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார். அத்தோடு மோகன் பகவத் பயணிக்கும் சாலைகளில் அவர் பயணத்தை முடிக்கும் வரை சாலைகளை செப்பனிடும் பணிகளில் ஈடுபட்டு இடையூறு செய்யக்கூடாது என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது.
எந்த பதவியிலும் இல்லாத மோகன் பகவத் வருகைக்காக ஏன் மாநகராட்சி இப்படி ஏற்பாடுகளை செய்ய வேண்டும் மதுரை எம்பி., சு.வெங்கடேசன் இந்த சுற்றறிக்கையை வெளியிட்டு மாவட்ட நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டிருந்தார். இதனை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் காதுகளுக்கு இந்த விவகாரம் எட்டவே அடுத்த கணமே மோகன் பகவத்தை வரவேற்க ஏற்பாடுகளை செய்யுமாறு சுற்றறிக்கை அனுப்பிய உதவி ஆணையர் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இப்படி தமிழகத்திற்கு ஒரு தேசிய தலைவர் வரும் நிகழ்வை கம்யூனிஸ்ட், தி.மு.க போன்ற கட்சிகள் பயந்து அரசியலாக்கும் விதத்தில் தமிழகம் இனி பா.ஜ.க'வா அல்லது தி.மு.க'வா என்ற பாதையில் பயணிக்க துவங்கிவிட்டதாக தெரிகிறது.