தி.மு.க பிரமுகரின் போலி மதுபான ஆலையை காட்டி கொடுத்ததால் இளைஞர் படுகொலை - தி.மு.க'வினர் வெறிச்செயலா?
By : Mohan Raj
தி.மு.க பிரமுகரின் போலி மதுபான ஆலை நடத்தி வந்ததை போலீசுக்கு தகவல் தெரிவித்ததால் திண்டுக்கல் இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற பரபரப்பு எழுந்துள்ளது.
திண்டுக்கல் அருகே அனுமந்தராயன்கோட்டை பேருந்து நிலையத்தில் ஸ்டீபன் என்ற இளைஞர் ஒருவரின் தலை துண்டிக்கப்பட்டு கிடந்தது. அவரது உடல் மட்டப்பாறை அருகே வீசப்பட்டிருந்தது. இந்நிலையில் திண்டுக்கல் ஸ்டீபன் கொலை வழக்கில் மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான மன்மதன் என்பவர் போலீசார் பிடிக்க வந்த போது தப்பி ஓடினார். மேலும் திண்டுக்கல் - திருச்சி மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து அவர் தப்பிக்கவும் முயன்றார். இதனால் அவரது கால் உடைந்தது. இதையடுத்து மாவுக்கட்டுப் போட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதன் விசாரணையில் கடந்த 22'ம் தேதி அனுமந்தராயன் கோட்டை தி.மு.க பிரமுகர் இன்பராஜூக்கு சொந்தமான தோட்டத்து வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 11,143 போலி மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சோதனை நடந்த இரவுதான் ஸ்டீபன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
அதாவது இன்பராஜுன் போலி மதுபான ஆலை தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுத்ததே ஸ்டீபன் என போலீசார் சந்தேகித்துள்ளனர். சம்பவத்தன்று ஸ்டீபனை வரவழைத்து முதலில் மதுபானம் வாங்கிக் கொடுத்தனர். பின்னர் சாப்பாடும் வாங்கி கொடுத்து அனுப்பி வைத்தனர். அப்போது அனுமந்தராயன் கோட்டை பேருந்து நிலையத்தில் ஸ்டீபன் நின்று கொண்டிருந்தார். அங்கு வந்த ஒரு கும்பல், மதுபோதையில் இருந்த ஸ்டீபனை வெட்டிப் படுகொலை செய்து தலையை துண்டித்து. பின்னர் உடலை மட்டப்பாறை அருகே வீசிச் சென்றது என்கின்றனர் போலீஸ் தரப்பினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.