இரண்டு தலைமுறையாக தி.மு.க'விற்கு உழைத்த வீரபாண்டியார் மகன் இறுதிசடங்கிற்கு கூட வராத உதயநிதி !

சமீபத்தில் இறந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் வீரபாண்டி ஆ.ராஜா மரணத்திற்கு கூட செல்லாமல் தி.மு.க'வின் முதல்வர் மகனும், சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ'வுமான உதயநிதி ஸ்டாலின் சினிமா படப்பிடிப்பில் இருந்ததால் தி.மு.க'வில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
தி.மு.க'வில் கடந்த இரண்டு ஆண்டுகளில் உதயநிதிக்கு தரும் முக்கியத்துவம் வேறு யாருக்கும் தருவதில்லை தி.மு.க'வினர். வயதில் மூத்தவராகிய கே.என்.நேரு கூட தனது பிறந்தநாளுக்கு தன்னைவிட வயதில் இளையவரான உதயநிதியிடம் நேரில் சென்று ஆசி வாங்கும் அளவிற்கு உதயநிதியின் செல்வாக்கு தி.மு.க'வில் குறுகிய காலத்தில் உயர்ந்தது. தி.மு.க'வை சேர்ந்த கட்சி நிகழ்ச்சியானாலும் சரி, அரசு விழாவானாலும் சரி முதல்வர் ஸ்டாலின் படத்திற்கு அடுத்தபடியாக எம்.எல்.ஏ'வாகிய உதயநிதியின் படத்தை போட்டு அமைச்சர்கள் படத்தை கூட சிறிதாக போடும் அளவிற்கு 'துணை முதல்வர்' போல் வலம் வந்தார் உதயநிதி ஸ்டாலின்.
இந்நிலையில் கடந்த வாரம் சேலம் மாவட்டத்தை தி.மு.க.வின் கோட்டையாக மாற்றி பல ஆண்டுகளாக கட்டிக் காத்துவந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் வீரபாண்டி ஆ.ராஜா திடீரென்று மாரடைப்பால் மரணமடைந்துவிட்டார். முன்காலத்தில் தி.மு.க.வில் கலைஞருக்கு அடுத்து செல்வாக்கு படைத்த தலைவராக விளங்கியவர் வீரபாண்டி ஆறுமுகம். இவரது மகன் மறைவிற்கு உடனடியாக மதுரையில் இருந்த முதல்வர் ஸ்டாலின் தனி விமானம் மூலம் சேலம் வந்தார்.
ஆனால் கட்சியின் பட்டத்து இளவரசர் போல் வலம் வந்த உதயநிதி ஸ்டாலினோ காலம்காலமாக தி.மு.க'விற்கு உழைத்தவரின் இறுதிசடங்கிற்கு கூட வராமல் சினிமா படப்பிடிப்பில் பரபரப்பாக இருந்துள்ளார். இது தொடர்பாக சேலம் வட்டார தி.மு.க'வில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.