மழையால் பறிபோன இரு உயிர்கள்! மெத்தனமாக பணிகளை துவங்கும் சென்னை மாநகராட்சி - தி.மு.க அரசில் தூங்கும் அதிகாரிகள் !
By : Mohan Raj
சென்னையில் மழையினால் இரு உயிர்கள் பலியானதையடுத்து தமிழக அரசு 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி 1000 பணியாளர்களை வைத்து சாலை பள்ளங்களை மூடி வருகிறது.
சென்னையில் கிண்டியில் சாலையில் உள்ள பள்ளத்தில் சிக்கி தடுமாறி பின்னால் வந்த பேருந்தின் சக்கரத்தில் சிக்கி முகம்மது யூனுஸ் என்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் சென்னையில் மற்றொரு சம்பவத்தில் பெண் காவலர் ஒருவர் பெருமழையில் வாகனம் நிறுத்தும் பகுதியில் மரம் விழுந்து உயிரிழந்தார். இந்த இரு சம்பவங்களிலும் உயிர்பலி ஏற்பட்டு அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் தமிழக அரசு மெதுவாக விழித்துக்கொண்டுள்ளது.
தற்பொழுது சாலைகளின் நடுவே உள்ள குழிகளில் இருசக்கர வாகன ஓட்டிகள் விழுந்து விபத்து ஏற்படுவதை தடுக்க குழிகளை மூடுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக 1000 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு குழிகளை மூடும் பணி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மண்டலத்திற்கும் ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு சாலை குழிகளை மூடும் பணி நடந்து வருகிறது. விடியல் ஆட்சி என விளம்பரங்களில் குறை வைக்காத தி.மு.க அரசு இரு உயிர்கள் பறிபோன பிறகு நடவடிக்கையில் இறங்கியுள்ளது.