இரட்டை வேஷம் போடுறீங்களா? - அன்னூர் தொழிற்பூங்கா விவகாரத்தில் ஸ்டாலினுக்கு சீமான் கேள்வி !
By : Mohan Raj
"கோவை, அன்னூரில் வேளாண் நிலங்களைப் பறித்துத் தொழிற்பூங்கா அமைக்கும் முடிவை தி.மு.க அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்" என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "கோவை மாவட்டத்தில் 3.500 ஏக்கர் பரப்பளவில் புதிதாகத் தொழிற்பூங்கா அமைக்க முடிவெடுத்துள்ள தமிழ்நாடு அரசு, அதற்காக மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூர் பகுதிகளில் வேளாண் நிலங்களை வலுக்கட்டாயமாகக் கையகப்படுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன. அதிலும், குறிப்பாக அன்னூர் வட்டத்திற்குட்பட்ட கிராமங்களில் மட்டும் ஏறத்தாழ 2.000 ஏக்கர் வேளாண் நிலங்களை அரசு கையப்படுத்த முயல்வதாக வேளாண் பெருங்குடி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். கடந்த அ.தி.மு.க ஆட்சியில் 900 ஏக்கரில் தொழிற்பூங்கா அமைக்க முயன்றபோதே அன்னூர் பகுதி விவசாயிகளின் கடுமையாக எதிர்ப்புக் காரணமாக அத்திட்டம் கைவிடப்பட்டது. தற்போது தி.மு.க அரசு, 2000 ஏக்கர் அளவிற்கு வேளாண் நிலங்களைத் தொழிற்சாலை. வளர்ச்சி என்ற பெயரில் கட்டாயப்படுத்திப் பெற முயல்வது ஏறத்தாழ 50,000 விவசாயிகளின் வாழ்வாதாரத்தை இருளில் தள்ளும் கொடுஞ்செயலாகும்.
அதுமட்டுமின்றி, அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டல் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில். விரைவில் குடிநீர்ப்பஞ்சம் நீங்கும் என்று அப்பகுதி மக்கள் நம்பிக்கையோடு காத்திருந்த சூழலில், தொழிற்பூங்கா அமைப்பதன் மூலம் அத்திட்டத்தின் நோக்கமும் சிதையக்கூடும். எனவே, வேளாண் நிலங்களைப் பறிப்பதென்பது வேளாண்மையை மட்டுமின்றி. நிலத்தடிநீர், காற்று. நிலம் ஆகியவற்றை மாசுபடுத்தி, மக்களின் நலத்தையும் கெடுத்து, சுற்றுச்சூழலையும் பெருமளவு பாதிக்கிறது. கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போது வேளாண் நிலங்கள் மீது எட்டுவழிச்சாலை அமைப்பதை எதிர்த்த தி.மு.க. தற்போது ஆட்சிக்கு வந்தவுடன் வேளாண் நிலங்களை அபகரித்துத் தொழிற்பூங்கா அமைக்க முயல்வது தி.மு.க'வின் இரட்டை வேடத்தையே வெளிக்காட்டுகிறது" என கடும் கோபத்துடன் அறிக்கை விடுத்துள்ளார்.