சென்னைக்கு மீண்டும் கனமழை - இம்முறையாவது மக்களை தண்ணீரில் தவிக்க விடாமல் காப்பாற்றுமா தி.மு.க அரசு?
By : Mohan Raj
சென்னையில் மீண்டும் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால் ஏற்கனவே மக்களை தண்ணீரில் தத்தளிக்க விட்ட தி.மு.க அரசு என்ன செய்யப்போகிறதோ என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 6'ம் தேதி பெய்த கனமழையால் சென்னை உள்பட பல்வேறு மாவட்டகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதில் குறிப்பாக சென்னையில் ஒரே நாள் இரவில் 23 செ.மீ. அளவுக்கு மழை பெய்ததால் நகரமே தண்ணீரில் தத்தளித்தது. தமிழக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் அறிவிப்பின் படி 536 இடங்கள் பாதிக்கப்பட்டன. ஆனால் நிஜத்தில் இன்னும் அதிகமாக இடங்கள் பாதிக்கப்பட்டதாக செய்திகள் வந்தன. குடிசைகள் மூழ்கின, சாலைகள் தத்தளித்தன, பாலங்கள் ஸ்தம்பித்தன, மக்கள் பாதுகாப்பான இடம் நோக்கி படையெடுக்க துவங்கினர். இப்படி கடந்த பத்து நாட்களாக சென்னை தத்தளித்து மக்கள் அவதிப்படும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இந்நிலையில் மீண்டும் சென்னையில் மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் 'ரெட் அலர்ட்' விடுத்துள்ளது கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வானிலை அறிக்கையில், "அந்தமான் கடல் பகுதியில் கடந்த 13-ந்தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மெல்ல மெல்ல நகர்ந்து நேற்று தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிக்கு வந்தது.
இந்த காற்றழுத்த தாழ்வு மேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக இன்று மாலை முதல் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய ஆரம்பிக்கும். சில இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உண்டு இதன் காரணமாகவே வானிலை ஆய்வு மையம் சென்னைக்கு முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதற்கான 'ரெட் அலர்ட்' விடுத்துள்ளது.
இந்நிலையில் கடந்த முறை போல தண்ணீரில் தத்தளிக்க விடுமா? அல்லது இம்முறை சீரிய முறையில் தண்ணீரை வடிய வைத்து மக்களை காப்பாற்றுமா? தி.மு.க அரசு என்ன செய்யப்போகிறது என மக்கள் கலக்கத்திலேயே உள்ளனர்.