புதுச்சேரிக்கு மழை நிவாரண நிதி வேண்டி அமித்ஷா'விடம் பேசிய ஆளுநர் தமிழிசை !
By : Mohan Raj
புதுச்சேரிக்கு மழை பாதிப்பு நிதி வழங்க அமித்ஷா'விடம் ஆளுநர் தமிழிசை பேசியுள்ளார்.
புதுவையில் பெய்து வரும் கனமழை காரணமாக, நகரின் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த ஒரு வாரத்தில் மட்டும் புதுவையில் 104.72 செ.மீ. மழை பெய்துள்ளது. இதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியிருக்கும் முகாமில் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று ஆய்வு செய்தார். அங்குள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு மதிய உணவு பரிமாறினார். மேலும், உணவின் தரத்தை அறிவதற்கு குழந்தைகளோடு அமர்ந்து உணவு அருந்தினார். பின்னர் குழந்தைகளுக்கு கல்வி சம்மந்தமான உபகரணங்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, "புதுச்சேரிக்கு வந்திருந்த மத்தியக் குழுவிடம், புதுச்சேரிக்கு போதுமான நிதியை வழங்க வேண்டும் என மாநில அரசு வலியுறுத்தியது. புதுச்சேரிக்கு போதுமான நிதியை உறுதி செய்வதற்காக, உள்துறை மந்திரி அமித் ஷாவையும் தொடர்பு கொண்டு பேசினேன். நிலைமையைச் சமாளிக்க போதுமான நிதியை மத்திய அரசு வழங்கும் என நம்புகிறேன். மழையினால் சேதமடைந்த உள்கட்டமைப்புகளும் சீரமைக்கப்படும்" என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.