"ஒற்றுமையே இல்லையே" - கோவையில் நடைபெற்ற கூட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் கடுகடுத்த உதயநிதி!
By : Mohan Raj
"ஒருங்கிணைப்பே இல்லையே" என கொங்கு மண்டல தி.மு.க உடன்பிறப்புகளிடம் உதயநிதி கடுகடுத்த செய்தி அரசியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தாலும் கொங்கு மண்டலத்தில் மண்ணை கவ்வியது. இதனால் ஆளும்கட்சியான பிறகு தி.மு.க தலைமைக்கு கொங்கு மண்டலம் ஒரு தலைவலியாகவும், கூர்ந்து கவனிக்க கூடிய ஒரு மண்டலமாகவும் மாறியது. கொங்கு மக்களின் மனநிலை தமிழகம் முழுவதும் பரவினால் இனி வரும் தேர்தல்களில் தி.மு.க ஆட்சியை பிடிப்பது எட்டாக்கனியாகிவிடும் என தெரிந்த தி.மு.க உடனடியாக கொங்கு மண்டலத்திற்கு அமைச்ச ஃ செந்தில் பாலாஜியை பொறுப்பில் அமர வைத்தது. வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை குறி வைத்து அமைச்சர் செந்தில் பாலாஜியும் காய்களை நகர்த்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று கோவை காளப்பட்டியில் நடந்த புதிய உறுப்பினர்கள் சேர்க்கை கூட்டத்தில் உதயநிதி கலந்து கொண்டார். பின்னர் மாலை கொடிசியா மைதானத்தில் ஒருங்கிணைந்த கோவை பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் உதயநிதி தலைமைதாங்கி பேசினார்.
அப்போது பேசிய அவர், "ஒருங்கிணைந்த கோவை மாவட்ட பூத் கமிட்டி கூட்டம். ஆனால், அந்த ஒருங்கிணைப்புதான் இல்ல." என உட்கட்சி பூசலை குறிப்பிட்டு கடுமையாகவே பேசினார். பின்னர் கூட்டம் முழுவதுமே உதயநிதி அப்செட்டாகவே இருந்தார். இறுதியாக அவர் பேசும்போது, "இனி நான் மாதம் ஒருமுறை கோவை வருவேன். உள்ளாட்சி தேர்தலில் நீங்கள் வெற்றி பெற வைத்தால், மாதம் 10 நாள் கோவையிலேயே தங்கி உங்களுடன் பணியாற்றுவேன்" என்று கூறினார்.