"இப்படி தரமில்லாத பொருள்களை எங்க தேடி வாங்குனீங்க, வெள்ளை அறிக்கை தாருங்கள்" - தி.மு.க அரசை வெளுக்கும் கிருஷ்ணசாமி
By : Mohan Raj
"இப்படிப்பட்ட தரமற்ற பொங்கல் பரிசுகளை எங்கே வாங்கினீர்கள்? வெள்ளை அறிக்கை தர தயாரா?" என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தி.மு.க அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரொக்கப்பணம் இல்லாமல் வெறும் பரிசுப்பொருள்கள் தர துவங்கியுள்ளது ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு. இப்பொருள்கள் கடந்த இரண்டு தினங்களாக மக்களுக்கு நியாய விலை கடை மூலம் தரப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வழங்கப்படும் பொருள்கள் தரமில்லாமல் இருப்பதாக வாங்கும் மக்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கான வீடியோ ஆதாரங்கள் பல சமூக வலைதளத்தில் உலாவுகின்றன. இந்த வீடியோவை கூட இன்று சட்டப்பேரவையில் வெளியே எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து காண்பித்தார்.
இந்நிலையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி இது தொடர்பாக இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, "தமிழக அரசு வழங்கிய பொங்கல் பொருள்கள் தரமற்றதாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. பொங்கலுக்கு வழங்கிய பொருள்கள் எங்கு வாங்கப்பட்டது, அந்த பொருள்களின் சந்தை விலை குறித்து வெள்ளை அறிக்கை விட வேண்டும்" என தெரிவித்தார்.