'எட்டு வழிச்சாலை தொடர்பான மத்திய அரசு கடிதம் இன்னும் வரவில்லை' - வழிமேல் விழிவைத்து காத்திருக்கும் அமைச்சர் எ.வ.வேலு
By : Mohan Raj
சேலம் எட்டுவழிச்சாலை விவகாரத்தில் மத்திய அரசின் கடிதத்திற்காக காத்துக்கொண்டிருக்கிறோம் என தி.மு.க அரசின் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் சேலம்-சென்னை இடையிலான எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு அப்போதைய எதிர்கட்சி தி.மு.க கடுமையாக எதிர்த்தது. எட்டுவழிச்சாலை வந்தால் விவசாயம் போய்விடும், மரங்கள் போய்விடும், மக்கள் எப்படி வாழ முடியும் என ஜம்பமாக போராட்டத்தில் இறங்கி கடுமையாக எதிர்த்தது. பின்னர் தற்பொழுது வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சியை பிடித்த உடன் எட்டுவழிச்சாலை விவகாரத்தில் வழக்கம்போல் மெல்ல பின்வாங்க துவங்கியுள்ளது தி.மு.க.
சென்னை துறைமுகத்தில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தார் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, "சென்னை நெடுஞ்சாலையின் கீழ் உள்ள 258 கி.மீ சாலைகளை சீரமைக்க ரூ.263 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன" என்றார்.
மேலும் பேசிய அவர், "சேலம் எட்டுவழிச்சாலை விவகாரத்தை பொறுத்த வரை அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அது குறித்து மத்திய அரசு இதுவரை மாநில அரசுக்கு ஏதும் கடிதம் எழுதவில்லை மத்திய அரசு கடிதம் எழுதும் பட்சத்தில் இது குறித்தான முதல்வரின் கொள்கை முடிவுப்படி செயல்படுவோம்" என்றார் அமைச்சர் எ.வ.வேலு.
எதிர்கட்சியாக இருக்கும் போது அரசியலுக்காக எட்டு வழிச்சாலையை எதிர்த்துவிட்டு தற்பொழுது ஆளும் கட்சியான பிறகு மத்திய அரசிடம் இருந்து கடிதம் வருமா என வழிமேல் விழிவைத்து தி.மு.க காத்துவருகிறது.