கருணாநிதியை மஞ்ச துண்டு இல்லாம அடையாளப்படுத்தினா விடுவார்களா? ஏன் வள்ளுவர், பாரதியாரை மாற்ற வேண்டும்? - பொன்.ராதாகிருஷ்ணன் சுளீர்
By : Mohan Raj
"கருணாநிதியின் மஞ்சள் துண்டுக்கு பதில் வேறு நிறத்தில் துண்டு அணிவித்து இருந்தால் ஒப்புக்கொள்வார்களா? அதுபோலத்தான் பாரதியாரும், திருவள்ளுவரும். அடையாளங்களை மாற்ற கூடாது" என பா.ஜ.க மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தனியார் பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளிக்கையில் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது, "பண்டைய தமிழ் முறைப்படி சம்மனமிட்டு அமர்ந்திருந்த திருவள்ளுவரை ஸ்டெனோகிராபர் போல் குறிப்பெடுக்க நிற்க வைத்த பெருமை கருணாநிதிக்குதான் உண்டு. வள்ளுவர் சிலை எந்த நிலையில் அமைக்கப்பட்டிருந்தாலும் அதை நான் பாராட்டுகிறேன். குற்றம் செல்லவில்லை, ஆனால் ஆளாளுக்கு இப்படி மாற்றிக்கொண்டிருந்தால் என்ன அர்த்தம்?
பாரதியார் நெற்றியில் இருந்த குங்குமத்தை அழித்தது யார்? திலகத்தை அழிக்க வேண்டிய தேவை என்ன வந்தது. பாரதியார் இந்து என்பதால் கிருஸ்தவர், இஸ்லாமியர் யாரும் பாடாமல் இருந்தார்களா என்ன? ஏன் அடையாளத்தை அப்புறப்படுத்துகிறீர்கள்?
உதாரணமாக கருணாநிதியின் உருவத்தை அடையாளப்படுத்தும் போது அவர் அணிந்திருந்ந மஞ்சள் நிற துண்டுக்கு பதிலாக வேறு நிறத்தில் துண்டு அணிவித்து 'இவர்தான் கருணாநிதி' என்றால் ஒப்புக்கொள்வார்களா? எனவே நாட்டின் தலைவர்களை தன் இஷ்டத்துக்கு மாற்றி அமைப்பது யாருக்கும் உரிமை கிடையாது" என தெரிவித்தார் பொன்.ராதாகிருஷ்ணன்.