'மீடியா வேணும்ணா பா.ஜ.க'வை பத்தி பேசலாம் ஆனா' - கனிமொழிக்கு பயத்தை ஏற்படுத்திய பா.ஜ.க வளர்ச்சி!
By : Mohan Raj
"ஊடகங்கள் வேணும்ணா பா.ஜ.க'வை பற்றி பேசலாம்" என எதிர்கட்சி பற்றிய கேள்விக்கு பயத்துடன் பதிலளித்துள்ளார் கனிமொழி.
தமிழகத்தில் தற்பொழுதைய அரசியல் சூழலில் பா.ஜ.க'வே பிரதான எதிர்கட்சியாக செயல்பட்டு வருகிறது. துறை வாரியாக நடக்கும் ஊழல்களை கேள்வி கேட்பதாகட்டும், அமைச்சர்களை தைரியமாக விமர்சித்து அவர்களின் தவறை சுட்டிக்காட்டுவதாகட்டும், தஞ்சையில் மத மாற்ற கொடுமையால் இறந்த சிறுமிக்கு நியாயம் கேட்கும் போராட்டமாகட்டும், மக்களிடத்தில் தி.மு.க அரசின் ஊழல் மற்றும் பித்தலாட்டத்தை தோலுரிப்பதாகட்டும் பா.ஜ.க'வே அண்ணாமலை தலைமையில் பிரதான எதிர்கட்சியாக திகழ்கிறது. இது வரலாற்றில் முதல்முறையாக நடப்பதால் இதுவரை அ.தி.மு.க எதிர்த்தே அரசியல் செய்து பழக்கப்பட்ட தி.மு.க'விற்கு பொறுக்க முடியவில்லை, மேலும் இந்த நிலை நீடித்தால் தேசிய கட்சி தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை மக்களை விட தி.மு.க உணர்ந்துள்ளது. அது கனிமொழியின் வார்த்தைகளில் அப்பட்டமாக தெரிகிறது.
சென்னை தரமணியில் உள்ள ராஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் நடைபெற்று வரும் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட கனிமொழி எம்.பி. பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, "இப்போது எதிர்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க அவர்களை காப்பாற்றிக் கொள்வதிலேயே அக்கரை காட்டுகிறார்களே தவிர அவர்கள் ஆளும்கட்சியாக இருந்த பொழுதும் செயல்படவில்லை, இப்பொழுது எதிர்கட்சியாக இருந்த பொழுதும் செயல்படவில்லை' என்றார். மேலும் பேசிய அவர், 'ஆனால் பா.ஜ.க எதிர்கட்சியாக செயல்படுகிறது என்பதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை ஊடகங்கள் வேண்டுமானால் பா.ஜ.க'வை பற்றி பேசலாம் ஆனால் மக்கள் யாரும் பொருட்படுத்தவில்லை' என்றார்.
மக்களின் பிரதிபலிப்பே ஊடகங்களில் ஒளிபரப்பாவது ஊடகங்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கட்சியை சேர்ந்தவருக்கு தெரியாதா என்ன?