நீட் விவகாரத்தில் மாணவர்களின் உணர்வுகளோடு விளையாடுகிறது தி.மு.க - மக்களவையில் ஒலித்த தமிழக எம்.பி'யின் குரல்!

By : Mohan Raj
நீட் விவகாரத்தில் மாணவர்களின் உணர்வுகளோடு தி.மு.க விளையாடுகிறது என தமிழக எம்.பி ரவீந்திரநாத் மக்களவையில் ஆவேசமாக பேசினார்.
மத்திய அரசின் பட்ஜெட்டை பாராட்டி மக்களவையில் உரையாற்றிய அ.தி.மு.க உறுப்பினர் ரவீந்திரநாத் பேசும்பொழுது கூறியதாவது, "கொரோனா உலகத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்த வேளையில் உலக அரங்கில் பொருளாதார வளர்ச்சியை நோக்கி செல்லும் நாடுகளில் நமது இந்தியாவும் இடம்பெற்றுள்ளது இதற்காக சிறப்பான நிர்வாகத் திறனை வெளிப்படுத்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை பாராட்டுகிறேன்" என்றார்.
மேலும் பேசிய அவர், "நீட் தேர்வை அன்று கொண்டுவந்தது காங்கிரஸ் அரசு, அதற்கு உதவியாக இருந்தது தி.மு.க 2004 முதல் 2014 ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகளாக தமிழகத்தில் காங்கிரஸ் மற்றும் தி.மு.க'வின் 10 மத்திய அமைச்சர்கள் இருந்தார்கள் அதே அரசின் இரண்டாவது ஆட்சியில் 7 மத்திய அமைச்சர்கள் இருந்தனர் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்த தி.மு.க'வின் காந்திசெல்வன் அன்று இந்த நீட் தேர்வின் மீதான சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி விட்டு இப்பொழுது தமிழகத்தில் மாணவர்களின் உணர்வுகளோடு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள், இதற்காக இந்த அவையின் மூலமாக அவர்களுக்கு கடும் கண்டனத்தை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
