காலத்தின் கட்டாயம் பொது சிவில் சட்டம்! மத்திய அரசு ஆலோசனை
By : Mohan Raj
'இந்தியா என்பது ஒரே நாடு, பொது சிவில் சட்டம் காலத்தின் கட்டாயம்' என மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாக இந்தியாவில் பல்வேறு இடங்களில் மதம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஆங்காங்கே தலைதூக்கி வருகின்றன, அதனை இடதுசாரி கட்சிகளும், அமைப்புகளும் தங்கள் அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தி குளிர்காய்ந்து வருகின்றனர். அவற்றை வைத்து அரசியல் செய்வது அவற்றில் தங்கள் கருத்துக்களை புகுத்தி குழப்பத்தை விளைவிப்பது மேலும் சர்ச்சையான கருத்துக்களை கூறுவது என நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் இடதுசாரி அமைப்புகளும், கட்சிகளும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
உதாரணமாக கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு கிளம்பிய விவகாரத்தை கூறலாம். பள்ளியில் படிக்கும் சிறுவர்களுக்கு சீருடை என்பது அடிப்படையான ஒன்று ஆனால் அதிலும் மதத்தை புகுத்தி மத வேறுபாட்டை திணித்து அந்த விவகாரத்தை அரசியல் ஆக்கியது மட்டுமல்லாமல் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் நீதிமன்றம் வரை எடுத்துச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் மத்திய பஞ்சாயத்துராஜ் அமைச்சர் கிரிராஜ் சிங் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது அவர் கூறியதாவது, "பா.ஜ.க அரசு நாடாளுமன்றத்தில் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை கொண்டுவர வலியுறுத்தி வருகிறது, மதம் மற்றும் பிராந்தியத்தின் பெயரால் நாட்டை உடைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன இந்தியா என்பது ஒரே நாடு அதனால் அனைவருக்கும் பொதுவான சட்டம் தேவை, சமத்துவத்தை உறுதி செய்வதே இதன் நோக்கம் பொது சிவில் சட்டம் காலத்தின் கட்டாயம்" என தெரிவித்துள்ளார்.