"பட்டியலின மக்கள் பா.ஜ.க'விற்கு படையெடுப்பது திருமாவளவனை பயத்தில் ஆழ்த்தியுள்ளது" - அம்பலப்படுத்தும் எல்.முருகன்
By : Mohan Raj
"திருமாவளவன் மிகவும் பயத்தில் இருக்கிறார் ஏனென்றால் பட்டியலின மக்கள் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு அதிகமாக வந்துள்ளனர், இன்று எந்த கிராமத்திற்கு சென்றாலும் அங்கே பா.ஜ.க'வின் கிளையும், கொடியும் இருக்கிறது அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் பேசுகின்றனர்" என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
'பகுத்தறிவு மூலமாக மக்கள் சிந்திக்கக் கூடாது என்பதற்காக ராமாயண, மகாபாரத புராண இதிகாச குப்பைகளை மக்கள் மூளையில் திணித்து உள்ளனர்' என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கடந்த வெள்ளிக்கிழமை அன்று புதுச்சேரியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கூறினார்.
இந்நிலையில் 30 மாநிலத்தைச் சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்கும் கைவினை கண்காட்சியை தொடங்கி வைக்க மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று புதுச்சேரிக்கு வருகை புரிந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, "ராமாயணமும், மகாபாரதமும் இந்திய தேசத்தின் இதிகாசங்கள் நம்முடைய முன்னோர்கள் அதனை நல்ல இதிகாசங்கள் ஆக போற்றியுள்ளனர், நம் முன்னோர்கள் ராமாயணத்தையும், மகாபாரதத்தையும் நமக்கு ஊட்டி வளர்த்தர்கள்" என்றார்.
மேலும் திருமாவளவனின் கூற்றுக்கு பதிலளிக்கும் விதமாக பேசிய அவர், "திருமாவளவன் மிகவும் பயத்தில் இருக்கிறார் ஏனென்றால் பட்டியலின மக்கள் தமிழகத்திலும், புதுச்சேரியிலும் பா.ஜ.க'விற்கு அதிகமாக வந்துள்ளனர், இன்று எந்த கிராமத்திற்கு சென்றாலும் அங்கே பா.ஜ.க'வின் கிளை இருக்கிறது, அதன் கொடி இருக்கிறது மேலும் பல சகோதரர்கள் இருக்கிறார்கள் அதை எல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாமல் தான் சிலர் அவதூறு விஷயங்கள் பேசுகின்றனர் அதை நாம் கடந்து போக வேண்டும்" என்றார்.
மேலும், "திருமாவளவன் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார் என தோன்றுகிறது, இந்த நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் சுமூக சூழல் இல்லாமல் இருக்க வேண்டும்' என்ற உள்நோக்கத்துடன் பேசிக்கொண்டிருக்கிறார். இத்தனை நாட்களாக பட்டியல் இன மக்களை ஏமாற்றி கொண்டு இருந்தோம் ஆனால் அவர்கள் இப்பொழுது விழித்துக் கொண்டார்கள் என்ற உணர்வில் பேசுகிறார்' என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.