"மேற்குவங்கம் மாதிரி இங்கேயும் சட்டசபையை முடக்க வேண்டுமா?" - ஸ்டாலினுக்கு எச்சரிக்கை விடுத்த எடப்பாடி
By : Mohan Raj
மேற்கு வங்கத்தை போல் தமிழ்நாட்டிலும் ஆளுநர் சட்டசபையை முடக்கலாம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த மூன்று நாட்களாக சேலம் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்து வருகிறார். பிரச்சாரத்தின் போது பேசிய எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது "தேர்தல் அதிகாரிகள் நடுநிலையோடு செயல்பட வேண்டும், ஆளும் கட்சி என்பதால் தி.மு.க'விற்கு பயந்து அதிகாரிகள் செயல்படக்கூடாது. திராவிட முன்னேற்றக் கழகம் எப்பொழுதும் நேர்வழியில் வந்ததாக சரித்திரமே கிடையாது ஏதாவது தில்லுமுல்லு செய்து எப்படியாவது முறையீடு செய்து இந்த தேர்தலில் வென்று விடலாம் என துடிக்கிறார்கள்" என்றார்.
மேலும், "தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் நடக்கும் தேர்தலில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் இதில் தவறுகள் நடந்தால் என்ன ஆகும் என்பதை மேற்கு வங்கத்தில் பார்க்க வேண்டும் மேற்கு வங்கத்தில் ஆளுநர் அங்கு சட்டசபை முடக்கியுள்ளார். தமிழ்நாட்டிலும் இதேபோல் தவறுகள் நடந்தாலும் ஆளுநர் சட்டசபை முடக்கும் நிலை ஏற்படலாம் அதே நிலைமை தமிழ்நாட்டிலும் எதிர்காலத்தில் நிகழும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் தி.மு.க" என கூறினார்.