தி.மு.க'வின் தலைமைக்கு கட்டுப்படாத உடன்பிறப்புகள் - கடுப்பான துரைமுருகன்
By : Mohan Raj
தி.மு.க கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக இதுவரை 104 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர், கட்சித் தலைமை சொல்வது ஒன்று தொண்டர்கள் செய்வது ஒன்று என இருப்பதற்கு காரணமே இது என்கின்றனர் அரசியல் ஆர்வலர்கள்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கட்சித் தலைமையால் அறிவிக்கப்பட்ட தி.மு.க வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு எதிராக தி.மு.க கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து இதுவரை 104 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
இதில் முதல் கட்டமாக 56 பேர் நீக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 48 பேர் தி.மு.க'வில் இருந்து நீக்கி பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பத்து வருடமாக ஆட்சியில் இல்லாத காரணத்தினாலும் ஆட்சிக்கு வந்து விட்டோம் இனி நாம் தாம் ஆளும் கட்சி எப்படியாவது பதவியை பிடித்து விடலாம் என்று வெறியிலும் பல ஏரியாவில் தி.மு.க'வினர் சுற்றி வருகின்றனர். இந்நிலையில் சில இடங்களை தி.மு.க'வின் தலைமை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது அவர்களுக்கு பிடிக்கவில்லை இதனால் கட்சிக் கட்டுப்பாடு கூட்டணி தர்மம் என எதையும் மதிக்காமல் தனக்கு பதவி கண்டிப்பாக வேண்டும் என தி.மு.க வின் பேச்சை மதிக்காமல் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட ஆர்வம் காட்டுவதும் மேலும் சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாறர்களுக்கு வாக்கு சேகரிப்பதுமாக இருந்து வந்தனர் தி.மு.க'வினர். இது தலைமைக்கு எட்டவே இவ்வாறு தன்னிச்சையாக செயல்பட்டு வந்த தி.மு.க'வினரை நீக்கி உத்தரவிட்டுள்ளார் பொதுச்செயலாளர் துரைமுருகன். இந்த விவகாரம் கட்சியின் பல இடங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க'விற்கு இது பெரிய அடியாக விழும் எனவும் தெரிகிறது.