'உதயநிதியின் உழைப்புதான் ஊருக்கே தெரியுமே' - வானதி சீனிவாசன்
By : Mohan Raj
"உதயநிதி எப்படி பொறுப்புக்கு வந்தார் என எல்லோருக்கும் தெரியும்" என்று உதயநிதியின் அரசியல் வாழ்வை குறிப்பிட்டு பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பேசியுள்ளார்.
சமீபத்தில் தனியார் பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்த பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூறியதாவது, "மாநில அளவிலான அரசியல் கட்சிகள் முடிவு எடுக்கக் கூடிய இடத்தில் தலைவர்களின் வாரிசுகள் இருந்து வருகிறார்கள். ஆனால் பா.ஜ.க தலைவர்கள் சிலரது வாரிசுகள் கடின அரசியல் பணி காரணமாக தான் பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் அவ்வளவுதான், அரசின் முடிவு எடுக்கக்கூடிய முக்கிய இடத்தில் இவர்கள் இல்லை" என்றார்.
"தேர்தலுக்காக பா.ஜ.க வேட்பாளர்களை தேர்வு செய்யக்கூடிய உயர்மட்டக் குழுவில் நானும் ஒரு உறுப்பினராக இருந்து வருகிறேன் எங்கள் கட்சியில் வாரிசு அடிப்படையில் யாரையும் தேர்ந்தெடுப்பதில்லை கட்சிக்கு அவர்கள் ஆற்றியிருக்கும் பணி தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது" எனவும் கூறினார்.
"தமிழ்நாட்டில் உதயநிதி ஸ்டாலின் எந்த அளவு உழைத்து இந்த பொறுப்புக்கு வந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும், 'இன்னும் அடுத்த முப்பது ஆண்டுகள் எங்களுக்கு தலைவர் பிரச்சினை பற்றிய கவலையே இல்லை' என தி.மு.க'வின் மூத்த அமைச்சர் ஒருவர் வெளிப்படையாக சொல்கிறார். பா.ஜ.க'வில இப்படி எல்லாம் நேரடியாக கட்சியின் இரண்டாம் இடத்துக்கு யாராவது வர முடியுமா?" எனவும் கேள்வி எழுப்பினார்.