இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கலவரங்களை ஏற்படுத்த தாவூதின் நிதி - என்.ஐ.ஏ பரபர அறிக்கை

By : Mohan Raj
வெடிபொருட்கள் மற்றும் பயங்கர ஆயுதங்களை பயன்படுத்தி இந்தியா மீது பயங்கரவாத தாக்குதல்களை நடத்த நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் திட்டமிட்டுள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
சமீபத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு தாவூத் மற்றும் அவருக்கு நெருக்கமான பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது, அதனைத் தொடர்ந்து ஒரு அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது. அதில், "தாவூத் இப்ராஹிம் நீண்ட காலமாக இந்தியா முழுவதும் பயங்கரவாத நடவடிக்கைகளை பரப்பி வருவதாகவும் சில அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபல தொழிலதிபர்களின் பெயர்கள் தாவூத்'தின் ஹிட் லிஸ்டில் இடம் பெற்றுள்ளன எனவும, அவர் டெல்லி மற்றும் மும்பையில் கவனம் செலுத்தினார் மற்ற நகரங்களை முற்றிலுமாக அழிக்க திட்டங்களைத் தீட்டினார்' எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹீம் மற்றும் அவரது உதவியாளர்களுக்கு எதிரான பணமோசடி வழக்கு தொடர்பாக நடைபெற்ற சோதனைக்கு அடுத்தபடியாக இந்த அறிக்கை வெளியானது குறிப்பிடத்தக்கது. மேலும் தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது உதவியாளர்கள் இந்தியா முழுவதும் அமைதியின்மையை உருவாக்க செயல்பட்டதாகவும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் தாவூத் தனது நெட்வொர்க் உடன் தொடர்பு கொள்ள பல்வேறு சமூக ஊடகங்களை பயன்படுத்துவதையும் அந்த அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது, மேலும் இந்தியாவின் பல பகுதிகளில் கலவரம் போன்ற சூழ்நிலையை உருவாக்க கலவரக்காரர்களுக்கு நிதியுதவி மற்றும் உபகரண உதவிகளை தாவூதின் கும்பல் வழங்கியதையும் அந்த அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.
