அப்துல் ரஹீம் அறிவித்த பூணூல் அறுப்பு போராட்டம் - கொந்தளிக்கும் தமிழ்நாடு பிராமணர் சங்கம்
By : Mohan Raj
இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலத் தலைவர் அப்துல் ரஹீம் அறிவித்துள்ள பூணூல் அறுப்பு போராட்டத்தை தமிழ்நாடு பிராமணர் சமாஜம் கண்டித்துள்ளது.
இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலத் தலைவர் அப்துல் ரஹீம் பூணூல் அறுப்பு போராட்டத்தை அறிவித்தார். இதனையடுத்து தமிழ்நாடு பிராமணர் சமாஜம் இரு வேறு பிரிவுகளுக்கு இடையே விரோத உணர்ச்சிகளைத் தூண்டும் விதத்தில் உள்ள அறிக்கைகளை வெளியிட்டு அவர்கள் மீது சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக மாநில தலைவர் ஹரிஹர முத்து ஐயர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் அந்த அறிக்கையில் கூறியதாவது, "இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலத் தலைவர் அப்துல் ரஹீம் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் 'காஞ்சி சங்கர மடத்தில் இருந்து கோட்சேவின் வாரிசுகள் அணியும் பூணூல் அறுப்பு போராட்டம் தொடரும்' என தெரிவித்துள்ளதற்கு வன்மையாக கண்டிக்கிறோம்" என்றார்
மேலும், "பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் இரு வேறு பிரிவுகளுக்கு இடையே உணர்ச்சிகளை தூண்டும் விதத்திலும் அறிக்கைகள் வெளியிடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என மத்திய அரசையும் தமிழக அரசையும் கேட்டுக் கொள்வதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.